புதன், 6 செப்டம்பர், 2017

தமிழ் இலக்கணங்களில் சார்பெழுத்துக்களின் தன்மைகளும் மாற்றங்களும்

தமிழ் இலக்கணங்களில் சார்பெழுத்துக்களின்
தன்மைகளும் மாற்றங்களும்

                சு.பிரபாகரன்


உலகில் தோன்றிய தொன்மையான மொழிகளுள் எழிலும் எழுச்சியும் மிக்கது தமிழ்மொழி. தமிழ்மொழி தொல்காப்பியம்முதல் அறுவகை இலக்கணம்ஈறாக பல்வேறு இலக்கண நூல்களைப் பெற்றுள்ளது. இவற்றில் தொல்காப்பியம், நன்னூல், இலக்கண விளக்கம், தொன்னூல் விளக்கம், முத்துவீரியம், சுவாமிநாதம் முதலான இலக்கண நூல்களில் சார்பெழுத்துக்களின் தன்மைகளையும் மாற்றங்களையும் ஆராய்வதாய் இக்கட்டுரை அமைகின்றது.

சார்பெழுத்துக்களின் தன்மைகள்

தமிழ் எழுத்துக்களை முதலெழுத்துக்கள், சார்பெழுத்துக்கள் என்று தொல்காப்பியத்திற்கும் பின் தோன்றிய இலக்கண நூல்கள் பகுத்துக் கூறுகின்றன. சார்பெழுத்தானது உயிர் எழுத்துக்கள் போன்று தனித்தும், மெய்யெழுத்துக்கள் போன்று உயிருடன் கூடியும் வராமல் ஒரு மொழியைச் சார்ந்து வருதலால் இது சார்பெழுத்தாகும். இவ்வாறு தனித்து இயங்கும் தன்மையற்ற சார்பெழுத்துக்களை தொல்காப்பியர்,

                 “சார்ந்துவரி னல்லது தமக்கியல் பிலவெனத்
          தேர்ந்து வெளிப்படுத்த ஏனை மூன்றும்
          தத்தம் சார்பிற் பிறப்பொடு சிவணி
          ஒத்த காட்சியின் தம்மியல் பியலும்”  (தொல்.101)

என்கிறார்.

சார்பெழுத்துக்களின் பிறப்பு பற்றி கூற வந்த தொல்காப்பியர், மொழிக்கண் பிற எழுத்துக்களைச் சார்ந்து வருதலின்றித் தாமே தனித்தியங்கும் இயல்பில்லாதனவாகிய சார்பெழுத்துக்கள் தத்தமக்குச் சார்பாகிய எழுத்துக்கள் பிறப்பிடத்தே பிறக்கும் என்று சார்பெழுத்துக்களின் பிறப்பைக்கூறி, சார்பெழுத்துக்களுக்கெனத் தனி பிறப்பியல்பும், தனி இயக்க இயல்பும் இல்லை என்று கூறுகிறார். இவற்றிற்கு உரைகண்ட நச்சினார்க்கினியர் சில எழுத்துக்களைச் சார்ந்து தோன்றினல்லது தமக்கெனத் தோன்றுதற்கு ஓரியல்பிலவென்று ஆராய்ந்து வெளிப்படுத்தப்பட்ட எழுத்துக்கள் தம்முடைய பிறப்பியல்பு மூன்றினையுங் கூறுங்கால் தத்தமக்கு உரிய சார்பாகிய மெய்களது சிறப்பிடத்தே பிறத்தலோடு பொருந்தி நடக்கும்”1 என்கிறார். மேலும் எழுத்துக்களுக்கு மாத்திரை (ஒலி அளவு) கூறிய தொல்காப்பியர்,

  ‘மெய்யின் அளபே அறையென மொழிப’  (தொல்.11)
 என்று மெய்யெழுத்திற்கு அரை மாத்திரை எனக்கூறி,
              அவ்வியல் நிலையும் ஏனை மூன்றே’  (தொல்.12)

என்று சார்பெழுத்துக்களுக்கும் அரை மாத்திரை (ஒலி அளவு) எனக் கூறுகிறார். இவ்வாறாகச் சார்பெழுத்துக்கள் தமக்கென தனி இயக்க இயல்பும், தனி பிறப்பியல்பும், தனி மாத்திரையும் (ஒலியளவும்) இல்லாத தன்மைகளைக் கொண்டவையாக விளங்குகின்றன என்பது புலப்படுகிறது.

சார்பெழுத்துக்களின் மாற்றங்கள்

தொல்காப்பியம் முதலாக (முன்னுரையில்) கூறப்பட்ட சில தமிழ் இலக்கண நூல்களின் வாயிலாகச் சார்பெழுத்துக்கள் அடைந்துள்ள மாற்றங்களைப் பின்வருமாறு காண்போம்.

தொல்காப்பியம்

தமிழ் இலக்கண, இலக்கியங்களில் மிகவும் தொன்மையானது தொல்காப்பியம். இது தன்னிகரற்ற தமிழ் இலக்கண நூலாகவும் தாய்மை இலக்கண நூலாகவும் விளங்குகிறது. தொல்காப்பிய(ர்)ம் காலம் இன்றைக்கு இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகட்கு முற்பட்டதென்பர். கி.மு.எழுநூறு என்பது பலரது கொள்கை”2 இத்தொன்மையான தொல்காப்பியம்ஃ

                 “எழுத் தெனப் படுப
          அகரமுத னகர விறுவாய்
          முப்பஃ தென்ப
          சார்ந்துவரன் மரபின் மூன்றலங் கடையே”  (தொல்.1)

என்று எழுத்தெனப் படுவது அகரத்தை முதலாக கொண்ட பன்னிரண்டும், னகரத்தை இறுதியாக கொண்ட பதினெட்டும் ஆகிய முப்பதும் ஆகும். அது தனக்கு தனித்து இயங்கும் இயல்பின்றி பிறவற்றோடு சார்ந்து வரும் மரபையுடைய சார்பெழுத்துக்கள் மூன்றும் இல்லாவிடத்து என்ற கருத்தை முன்வைக்கிறது.  இளம்ப10ரணர் எழுத்தென்று சிறப்பித்துச் சொல்லப்படுவன அகரமாகிய முதலையுடையனவும் னகரமாகிய இறுவாயினையுடையனவுமாகிய முப்பதென்று சொல்லுப; சார்ந்து வருதலாகிய இலக்கணத்தினையுடைய மூன்றும் அல்லாவிடத்து மூன்றும் ஆனவிடத்து முப்பத்து மூன்று என்று சொல்லுப”3 என்கின்றார்.

இவற்றில் சார்ந்துவரன் மரபின்என்றதனால் தொல்காப்பியர் சார்பெழுத்துக்களை வெளிப்படையாய் கூறாது குறிப்பால் கூறிச் சென்றமை புலனாகின்றது. சார்பெழுத்துக்களைக் குறிப்பால் கூறியதோடு,

                 “அவைதாம்
          குற்றியலிகரம் குற்றியலுகரம் ஆய்தம் என்ற
          முப்பாற் புள்ளியும் எழுத்தோ ரன்ன”   (தொல்.2)

என்று சார்பெடுத்துக்களின் வகை மூன்று என்பதனையும் சுட்டுகிறார். இவ்வாறாகத் தொல்காப்பியத்தில் சார்பெழுத்துக்களும் அதன் வகைகளும் இடம்பெற்றிருப்பதை நாம் உணரலாம்.

நன்னூல்

தமிழ் எழுத்துக்களை முதலெழுத்துக்கள் சார்பெழுத்துக்கள் என்று வெளிப்படையாய் முதன்முதலில் எடுத்தியம்பிய நூல் நன்னூல். இதன்காலம் கி.பி.12ஆம் நூற்றாண்டாகும். நன்னூலார் எழுத்துக்களை முதல் எழுத்துக்கள் சார்பெழுத்துக்கள் என்றதனை,

                மொழிமுதற் காரண மாமணுத் திரளொலி
             எழுத்து முதல்சார் பெனவிரு வனகத்தே”  (நன்.58)

என்ற நூற்பாவின் மூலம் அறியலாம்.

  உயிர்மெய் யாய்த முயரள பொற்றள
             பஃகிய இஉ ஐஒள மஃகான்
           தனிநிலை பத்துஞ் சார்பெழுத் தாகும்”  (நன்.60)

என்ற நூற்பாவில் உயிர்மெய், ஆய்தம், உயிரளபெடை, ஒற்றளபெடை, குற்றியலிகரம், குற்றியலுகரம், ஐகாரக்குறுக்கம், ஒளகாரக் குறுக்கம், மகரக் குறுக்கம், ஆய்தக் குறுக்கம் என பத்து வகையான சார்பெழுத்துக்களை நன்னூலார் கூறுகின்றார். மேலும்,

  “உயிர்மெய் இரட்டுநூற் றெட்டுய ராய்தம்
                 …………………………………………..
             ஓன்றொழி முந்நூற் றெழுபா னென்ப”   (நன்.61)

என்ற நூற்பாவின் மூலம் உயிர்மெய்-216, முற்றாய்தம்-8, உயிரளபெடை-21, ஒற்றளபெடை-42, குற்றியலிகரம்-37, குற்றியலுகரம்-36, ஐகாரக்குறுக்கம்-3, ஒளகாரக்குறுகு;கம்-1, மகரக்குறுக்கம்-3, ஆய்தம்-2 ஆக மொத்தம் 369 சார்பெழுத்துக்களின் விரிகளையும் விளக்கியுள்ளார். தொல்காப்பியர் சார்பெழுத்தின் வகையை மட்டும் சொல்லிச் சென்றார். நன்னூலாரோ தொகை, வகை, விரிகளையும் விளக்கியுள்ளமை நினைவு கூறத்தக்கதாகும். தொல்காப்பியர் செய்கை யொன்றனையு நோக்கிச் சார்பெழுத்து மூன்றெனக் கருவி செய்தா ராகலின், இவ்வாசிரியர் (நன்னூலார்) செய்கையுஞ் செய்யுளியலு நோக்கிச் சார்பெழுத்துப் பத்தெனக் கருவி செய்தாரென்பதும் உய்த்துணர்க”4 என்றமை, தொல்காப்பியர் புணர்ச்சி விதிகளின்படி சார்பெழுத்து மூன்றெனவும், நன்னூலார் புணர்ச்சி விதிகளின்படியும், செய்யுள் ஈட்டல் அடிப்படையிலும் சார்பெழுத்தை பத்தென வகுத்தமையையும் சுட்டுகிறது. செய்கைஎன்பது புணர்ச்சி விதிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

இலக்கண விளக்கம்

இலக்கண விளக்கத்தின் ஆசிரியர்; நன்னூலாரின் எழுத்துப் பாகுபாடான முதல் சார்பு என்பவற்றில் ஒன்றிப்போனாலும் அதன் வகை விரிகளிலே சற்று வேறுபடுகின்றார் என்பதை,

  குற்றிய லிகரம் குற்றிய லுகரம்
          ஆய்தமொடு உயிர்மெய் ஈரளபு ஐஒள
          மஃகான் குறுக்கம் உள்ளுறுத்து ஒன்பதும்
           சார்பின் பால என்மனார் அவற்றுள்
          உயிர்மெய் இரட்டுநூற்று எட்டு உயிர் அளபுழ்
           ஒற்றளபு பதினொன்று ஒன்றுஒன்று ஏனைய
           ஆயிரு நூற்றுஎண் ணைந்தும் அதன் விரியே”  (இ.வி.5)
                                              
என்ற நூற்பா தெளிவுபடுத்துகிறது. இங்குச் சார்பெழுத்தின் வகையாகக் குற்றியலிகரம், குற்றியலுகரம், ஆய்தம், உயிர்மெய், உயிரளபெடை, ஒற்றளபடை, ஐகாரக்குறுக்கம், ஒளகாரக்குறுக்கம், மகரக்குறுக்கம் ஆகிய ஒன்பதையும்; விரியாக உயிர்மெய்-216, உயிரளபெடை-7, ஒற்றளபெடை-11, குற்றியலிகரம்-1, குற்றியலுகரம்-1, ஆய்தம்-1, ஐகாரக்குறுக்கம்-1, ஒளகாரக்குறுக்கம்-1, மகரக்குறுக்கம்-1 ஆகிய இருநூற்று நாற்பதையும் கூறுகின்றார். இவர் ஆய்தக்குறுக்கத்தை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை ஆய்தக்குறுக்கம் ஒன்றுளது என்றும் அதனொடு கூடச் சார்பெழுத்துப் பத்தாம் என்னும் அதன் விரித்தொகை முந்நூற்று அறுபத்தொன்பதாம் என்றும் கூறுவாரும் உளராலோ எனின் என்று காரணம் காட்டி மறுக்கிறார்5 என்பது மூலம் உணரலாம்.

தொன்னூல் விளக்கத்தின் ஆசிரியர் வீரமாமுனிவர் (தொ.வி.5) நன்னூலாரின் முதல், சார்பு என்ற பாகுபாட்டையும், சார்பெழுத்தின் வகை 10 என்பதையும் ஏற்றுக்கொண்டு சார்பெழுத்தின் விரியைச் சுட்டாமலே விட்டுச் சென்றுள்ளார்.

முத்துவீரியம்

தமிழில் இயற்றப்பெற்ற ஐந்திலக்கண நூல்களுள் ஒன்று. இதன் ஆசிரியர் முத்துவீர உபாத்தியாயர். காலம் கி.பி.19-ஆம் நூற்றாண்டாகும். முத்துவீர உபாத்தியாயர் சார்பெழுத்து பற்றி முன்னோர்களிடமிருந்து முற்றிலும் வேறுபடுவதை,

 ‘சார்புயிர் மெய்தனி நிலையிரு பாலன’   (மு.வீ.22)

என்ற நூற்பா சுட்டுகிறது. இதில் ஆசிரியர் சார்பெழுத்து, உயிர்மெய், ஆய்தம் என இரண்டு வகையாய் கூறியிருப்பது தொல்காப்பியரின் மூன்று வகையிலும், நன்னூலாரின் பத்து வகையிலும், வைத்தியநாததேசிகரின் ஒன்பது வகையிலும் சேராது தனித்து நிற்பது ஆராயத்தக்கதாகும்.

சுவாமிநாதம் இலக்கண விளக்கத்தை ஒட்டிக் கூறினும் அது கூறாத ஆய்தக் குறுக்கத்தையும் சேர்த்துக் கொண்டதால் வகை 10, விரி 241 என்று இலக்கண விளக்கத்தைக் காட்டிலும் ஒன்று எண் மிகையாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

முடிவுரை

தமிழ் இலக்கணங்களில் சார்பெழுத்துக்களைத் தொல்காப்பியம் மூன்றெனவும்; நன்னூல் பத்து எனவும், விரி முந்நூற்று அறுபத்தொன்பதெனவும்; இலக்கண விளக்கம் ஒன்பது எனவும், விரி இருநூற்று நாற்பதெனவும்; தொன்னூல் விளக்கம் பத்தெனக்கூறி விரி கூறாமலும், முத்துவீரியம் இரண்டென முன்னை நூல்களிலிருந்து முரண்பட்டும்; சுவாமிநாதம் இலக்கண விளக்கத்தை ஒன்றி வந்தாலும்; வகையிலும், விரியிலும் ஒன்று மிகைப்பட வந்துள்ளமை அதன் மாற்றங்களை வெளிப்படுத்துகின்றன. இவ்வாறு மாறுபட்டிருப்பினும், இவை அனைத்தும் தொல்காப்பியத்தைச் சார்ந்தே அமைந்திருப்பது அவற்றை நுண்மையாக நோக்கும் பொழுதே புலப்படும்.


சான்றெண் விளக்கம்

1.         ஞா.தேவநேயப்பாவாணர் - தொல்காப்பிய எழுத்ததிகாரம், நச்சினார்க்கினியர் உரை, ப.69.

2.   தமிழண்ணல் - புதிய நோக்கில் தமிழ் இலக்கிய வரலாறு, ப.294.

3.   கு.சுந்தரமூர்த்தி - தொல்காப்பிய எழுத்ததிகாரம், இளம்ப10ரணர் உரை, ப.25.

4.   ஆறுமுகநாவலர் - நன்னூல் மூலமும்விருத்தி உரையும், ப.43.


5.   ச.வே.சுப்பிரமணியன் - தமிழ் இலக்கண நூல்கள், ப.380.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக