மருத்துவப்
பங்களிப்பில் கலைக்கதிர்
சு. பிரபாகரன்
நாம் வாழ்ந்து வரும் அறிவியல் யுகத்தில் ஒரு
பகுதியில் நிகழும் நிகழ்வினை வசிப்பிடத்திலிருந்து தெரிந்துகொள்ளுதல்
என்பது இன்றியமையாத ஒன்று. இவற்றை மக்களின்முன் கொண்டுசெல்லும் தகவல் தொடர்பு
சாதனங்களாக இதழ்களும், ஊடகங்களும் திகழ்கின்றன. இன்று இணையம், மின்னஞ்சல் போன்ற
பல்வேறு வசதிகள் இருந்தாலும் இதழ்களே அனைத்து மக்களையும் சென்றடையும் தகவல்
தொடர்பு சாதனமாகத் திகழ்கிறது. இவ்விதழ்களை நாளிதழ்கள், வாரஇதழ்கள், மாத இதழ்கள்
என வகைப்படுத்தலாம். இவ்வகையில் 1948-ஆம் ஆண்டு பேராசிரியர் ஜி.ஆர். தாமோதரன்
அவர்கள் நிறுவிய இதழ் கலைக்கதிர் அறிவியல் மாத இதழாகும்.
இவ்விதழில் மாதந்தோறும் அறிவியல் தொடர்பான வெளியீடுகள்
வெளிவந்து கொண்டிருக்கின்றன. இவற்றில் குறிப்பிடத்தக்கது மருத்துவம் ஆகும்.
இம்மருத்துவம் பற்றிய செய்திகளைக் கலைக்கதிர் இதழின் மூலம் ஆராய்வதே
இக்கட்டுரையின் நோக்கமாக அமைகின்றது.
மருத்துவம்
மனிதர்களைத் துன்பப்படுத்தும் அனைத்தையும் நோய்கள் என்கின்றோம். இந்நோய்கள் பல்வேறு வகையிலும் மனிதர்களைப் பாதிக்கின்றன. இவற்றைச் சரிசெய்யும் முயற்சியே மருத்துவம் ஆகும். இவற்றைத் தமிழ் விக்கிப்பீடியா "மருத்துவம் என்பது நோய்களைக் குணப்படுத்துவதற்கான கலையும், அறிவியலும் ஆகும். இது, நோய்த்தடுப்பு, குணப்படுத்துதல் போன்றவற்றின் மூலம் மனிதர்களின் உடல் நலத்தைப் பேணுதல், மீள்வித்தல் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்ட பல்வேறு உடல்நலம் பேணற் செயல்முறைகளை உள்ளடக்கும்''1 என்கிறது. இதனடிப்படையில் 2013- செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் வெளிவந்த கலைக்கதிர் அறிவியல் மாத இதழில் ஊட்டச் சத்துக்கள், மாரடைப்பு, புற்றுநோய் போன்ற மருந்துச் செய்திகளைப் பின்வருமாறு காண்போம்.
சரிவிகித
ஊட்டச்சத்து
நாம் நோயற்ற வாழ்வு வாழ்வதென்பது இன்று சவாலான
ஒன்று.
நோய்கள் நம்மை ஆளும் சக்திகளைப் பெற்றுவிட்டன.
இந்நோய்களை மருத்துவத்துறையின் நோயியல் துறை இரண்டாகப் பகுக்கின்றது.
அவை 1. பற்றாக்குறை நோய்கள், 2. தொற்று நோய்கள் ஆகியனவாகும். இவற்றில் தொற்று
நோய்கள் பற்றாக்குறை நோய்களின் மூலமே பரவுகின்றன.
இந்தப் பற்றாக்குறை நோயானது சரிவிகித ஊட்டச்சத்து இன்மையால் ஏற்படுகிறது.
சரிவிகித ஊட்டச்சத்து என்பது நாம் அன்றாடம் உண்ணும் உணவில் மாவு, புரதம்,
விட்டமின்கள், கொழுப்பு, தாது உப்புக்கள் போன்ற சத்துக்களைத்
தேவைக்கேற்ப சரிவிகிதத்தில் சேர்த்துக்கொள்வதாகும். இவ்வாறு சேர்த்துக்கொள்வதன் மூலம்
பற்றாக்குறை நோய்களைப் போக்குவதோடல்லாமல் தொற்றுநோய்கள் வருவதும் முற்றிலும்
தடுக்கப்படுகின்றன. இதனால் நோயற்ற வாழ்வு வாழ்வதென்பது சாத்தியமாகின்றது.
இவற்றையே தே.ப.சின்னசாமி அவர்கள் "சரிவிகித உணவு
முறை உடலை நலமாக வாழவைக்கும். அறுசுவையும் அன்றாட உணவில் சம அளவில் சேர வேண்டும்.
இதுவே சரிவிகித உணவு முறையாகும்"2 என்கிறார். இவற்றை வள்ளுவரும் ‘மாறுபாடு
இல்லாத உண்டி மறுத்துண்ணின் ஊறுபாடு இல்லை
உயிர்க்கு‘ என்று கூறுகின்றார்.
கலைக்கதிரும்
சரிவிகித ஊட்டச்சத்தும்.
ஊட்டச்சத்துக்கள் மூலம்
நாம் உயிர் வாழ்வதற்குத் தேவையான அனைத்துச் சக்திகளையும் பெறுகின்றோம். இவற்றைக்
கலைக்கதிர் 2013 செப்டம்பர் மாத அறிவியல் இதழ் உணவின் சத்துக்கள் என்னும் தலைப்பின் மூலம் விவரிக்கின்றது. இதில்
மனிதர்கள் ஆரோக்கியமாக
வாழ்வதற்குத்
தேவைப்படும் முக்கிய சத்துக்களான மாவுப்பொருட்கள், புரதம், கொழுப்பு, பதிமூன்று
வகையான தாது உப்புக்கள் வைட்டமின்கள் ஆகியவற்றில் என்னென்ன நன்மைகள்,
தீமைகள் உள்ளன;
இவைகள் சராசரியாக மனிதர்களுக்கு எந்த அளவு தேவைப்படுகின்றன;
இச்சத்துக்கள் எந்தெந்த உணவுப் பொருட்களில் மிகுந்துள்ளன என்பதை இவ்விதழ்
சுட்டிக்காட்டுகின்றது. இவற்றிற்கு உதாரணமாக,
வைட்டமின் ஏ கொழுப்பில் கரையும். வெப்பம் தாங்கும்.
நமது உடலில் 150 மி.கிராம் உள்ளது. காரட், பப்பாளி, பலா,
பேரீச்சை, கீரைகளில் மிகுந்துள்ளது. நமது தினசரி தேவை 4000 முதல் 6000 அலகு
வரை.
இச்சத்துக்கள் குறைந்தால் கண்பார்வை நோய்கள் ஏற்படும் என்பதைச் சுட்டலாம்.
இதைப்போன்றே அனைத்து வகையான சத்துக்களையும் விளக்கி ஆரோக்கியத்துடன்
கூடிய நல்வாழ்விற்கு
இவ்விதழ் வழிவகுத்துள்ளமை
குறிப்பிடத்தக்கதாகும்.
இதய நோய்கள்
மனிதர்களை உடனடியாக வியப்பிற்குள் தள்ளும்
நோய்களுள் இதய நோயும் (Heart attack) ஒன்று. இவ்விதய நோய்களாக இதயவலி,
மாரடைப்பு ஆகிய இரண்டையும் கூறலாம். இவ்விதய நோய்கள் பற்றி மருத்துவர்
முத்துச்செல்வக்குமார் அவர்கள் "இதயம் சீராக சுருங்கி விரிந்து இயங்குவதற்கு, அதற்குத்
தேவையான ஆக்சிசனும் சக்தியும் இரத்தத்தின் மூலம் கிடைக்க வேண்டும். அந்த இரத்தத்தை
எடுத்துச் செல்லும் இரத்தக் குழாய்களில் அதிக கொழுப்புப்
படிவதால் அல்லது வயதாகின்ற போது இரத்தக் குழாய் தடித்து அதன் உள்பகுதி
சுருங்கிவிடுவதால் இதயத்திற்குத் தேவையான இரத்தம் கிடைக்காமல் இதய நோய்கள்
உண்டாகிவிடும்"3 என்கிறார். இந்த இதய நோய்கள் இந்தியாவில் ஒரு 30
ஆண்டுகளுக்கு முன்பு இளவயதினரிடையே மிக அரிதாகவே காணப்பட்டது. தற்பொழுது 30-40
வயதில் கூட இந்நோய் பரவலாகக் காணப்படுவது இதன் அதிவேக
தாக்கத்தை வெளிப்படுத்துகின்றது.
கலைக்கதிரில் இதய நோய்கள் பற்றி
அதிவேகத்தில் மனிதர்களைத் தாக்கும் இதய
நோய்கள் பற்றி கலைக்கதிர் (செப்டம்பர் - 2013 ) இதழானது ஹார்ட் அட்டாக் (Heart attack ) என்னும் தலைப்பில் மக்களிடம்
உரையாடுகின்றது. இதில் இதயத்திற்கு இரத்தம் கொண்டு செல்லும் இதயத் தமனிகளில்
கொழுப்பு படிந்து இரத்தம் தடைபடுவதாலும் தமனிக் குழாய்கள் தடித்து உள்வட்டம்
குறுகிவிடுவதாலும் இதயத்திற்குத் தேவையான இரத்தமும் பிராண வாயுவும் குறைகிறது.
இதனால் இதய வலி (Angina pectoris ) ஏற்படுகிறது;
என்று இதய வலி பற்றியும், இதயத்திற்கு இரத்தத்தைக் கொண்டு செல்கின்ற
இதயத் தமனி குழாய்களில்
(coronary arteries) நாளடைவில் ஏற்படுகின்ற கொழுப்பு படிமங்கள் பெருகி
அடைப்பை ஏற்படுத்துகின்றன. இதனால் இதயத்திற்குச் செல்லும் இரத்த ஓட்டம்
தடைபடுகிறது. இக்காரணமாக தேவையான பிராணவாயு கிடைக்காததால் மாரடைப்பு என்னும்
கொடிய நோய் ஏற்படுகின்றது என மாரடைப்புப் பற்றியும்
சுட்டுகிறது. இவ்வடைப்பிற்கான காரணங்களாக இரத்தத்தில் அதிக கொழுப்புச் சத்து,
உயர் இரத்த அழுத்தம், புகைபிடித்தல், உடல் பருமன், மன அழுத்தம், குறைந்துவிட்ட
உடலுழைப்பு என்னும் சிறு சிறு உட்தலைப்புகளின் மூலம் விவரித்துள்ளது. இந்த
அடைப்பைக் கரைக்க நாம் என்ன செய்ய வேண்டும், மாரடைப்பு ஏற்பட்டால் உடனே என்ன செய்ய
வேண்டும் என்பன பற்றியும் எடுத்தியம்புகிறது. இவ்விதய நோய்களை விளைவிக்கும்
கொழுப்புச் சத்து பற்றி 2013 அக்டோபர் மாத கலைக்கதிர் இதழ் கொலஸ்ட்ரால் என்னும் தலைப்பில்
ஆலோசனை வழங்கியிருகின்றது.
புற்று நோயும் கலைக்கதிரும்
நம்மை தாக்கும் உயிர்க்கொல்லி நோய்களில்
குறிப்பிடத்தக்கது புற்றுநோய். மனித உடலானது பலவகை செல்களால் ஆனது. இயல்பாகவே
உடலில் உள்ள செல்கள் வளர்ந்து, பிரிந்து உடலை
ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளத் தேவையான பல செல்களை உருவாக்குகின்றன. சில வேளைகளில்
உடலுக்குத்
தேவையற்ற பல செல்கள் தோன்றுகின்றன. உடலில் உள்ள பழைய செல்கள் வெளியேறாமல்
உடலிலேயே மிகுபடுகின்றன. இவ்வாறு மிகுபடும் செல்கள் திசுக்களின் கூட்டை
ஏற்படுத்துகிறது. இத்திசுக்களின் கூட்டைத் தீங்கில்லா
திசுக்களின் கூட்டம், கேடுவிளைவிக்கும் திசுக்களின் கூட்டம்
எனப்பிரிக்கலாம். தீங்கில்லா திசுக்களின் கூட்டம்
எந்த வித உபாதைகளையும் ஏற்படுத்துவதில்லை. இவற்றை உடலிலிருந்து அகற்றிவிடலாம்.
ஆனால் கேடு விளைவிக்கும் திசுக்களின் கூட்டமானது இயல்புக்கு மாறாக எந்தக்
கட்டுப்பாடின்றி பிரிவுற்றுப் பெருகும். இவற்றையே
நாம் புற்று நோய் என்கின்றோம். இவற்றை தே.பே.சின்னச்சாமி அவர்கள் " புற்று
நோய் என்பது உடலில் வேண்டாத வளச்சிப் படைப்பாகும் இந்தப் புடைப்பு எந்தந்த
இடங்களில் பற்றுகிறதோ அந்தப் பெயரில் வழங்கப்படுகிறது”4
என்கிறார். இதனடிப்படையில் நாம் இரத்தப் புற்றுநோய், குடல்
புற்றுநோய், மார்பகப் புற்றுநோய் என்று கூறுகின்றோம்.
இந்தப் புற்றுநோய் பற்றி கலைக்கதிர் (அக்டோபர் 2013) இதழானது புற்று நோய் மற்றும் தடுப்பு முறைகள் என்னும் தலைப்பில் அலசி ஆலோசிக்கின்றது. இவற்றில் புற்றுநோய் எதனால் வருகிறது? என்னும் உட்தலைப்பில், சாதாரணமாகச் செல்கள் ஓர் ஒழுங்கான முறையில் பிரிந்து வளர்ந்து பின் இறக்கின்றன. இம்முறையில் ஏதேனும் மாற்றம் அல்லது குறைபாடு நேருமானால் ஒழுங்கற்ற பிரிதல் நடைபெற்ற அச்செல் அழிந்து போகாமல் மேலும் பல செல்களை உற்பத்தி செய்கின்றது. இதனால் அசாதாரணமான செல்கள் தோன்றி உடல் இயக்கத்திற்குக் கட்டுப்படாமல் தன்னிச்சையாக இயங்க ஆரம்பிக்கின்றன என்று புற்று நோயின் உருவாக்கத்தை எடுத்துரைக்கின்றது. புற்றுநோயின் அறிகுறிகள் என்ன? என்னும் உட்தலைப்பில் புற்றுநோயின் அறிகுறிகள் பற்றி விளக்கியுள்ளது. உதாரணமாக நம் தோலில் உள்ள மச்சம் மற்றும் மருவில் பெரிய மாற்றங்கள் வருவது தோல் புற்றின் அறிகுறியாகும். வாயின் உட்பகுதி மற்றும் நாக்கில் வெண்புள்ளிகள் தோன்றுவது வாய்ப்புற்றின் அறிகுறியாகும். இதோடு நில்லாமல் தடுப்பு முறைகள் என்னும் உட்தலைப்பில் புகைப்பிடித்தால் நுரையீரல் புற்றுநோய் ஏற்படும். மேலும் வாய், தொண்டை, உணவுக்குழல், குரல்வளை, ஈரல் முதலியன பாதிப்படைகின்றன. ஆகவே புகைபிடித்தலைப் பற்றிய நினைப்பே கூடாது என்றும், காய்கறிகள் மற்றும் பழங்கள் நிறைய உண்பதால் மாரடைப்பு, புற்றுநோய், நீரழிவு மற்றும் இரத்தக் கொதிப்பு வராமல் தடுக்கலாம் என்றும், அதிகமான உடல் பருமனைக் குறைத்து ஊறுகாய் மற்றும் உப்பு நிறைந்த உணவுகளைத் தவிர்ப்பதன் மூலமும் புற்றுநோய் வராமல் தடுக்கலாம் என்றும் அறிவுறுத்துகின்றது.
முடிவுரை
இன்று பல்வேறு கொடிய
நோய்கள் பல்வேறு வகைகளில் நமக்கு ஊறுகளை விளைவித்துக் கொண்டிருக்கின்றன.
இவற்றில் சில நோய்களை மட்டுமே மருத்துவத்தின் மூலம் குணப்படுத்த இயலும். சில
நோய்களை வராமல் தடுக்க முடியுமே தவிர வந்தபின் தடுக்க இயலாது. ஆகவே நாம்
நோய்களிலிலிருந்து விடுபடுவதற்கான வழிமுறைகளை அறிந்து அதன்படி வாழ்வோமேயானால்
உயிரைப் பறிக்கும் எந்த நோயும் நம்மைச் சீண்டுவதில்லை. இவற்றை வள்ளுவர் ‘எதிரதாக்
காக்கும் அறிவினார்க் கில்லை அதிர வருவதோர் நோய்’ என்கிறார்.
ஆகவே,
நாம் நோய்கள் வருவதற்குமுன் அது பற்றிய ஆலோசனைகளையும்,
அறிவுரைகளையும் அறிந்து நோயின்றி வாழ்வதற்கு வழிவகுக்க வேண்டும். இவற்றை மனத்தில்
கொண்டு
அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில் கலைக்கதிர் - அறிவியல் மாத இதழானது நோயற்ற
வாழ்விற்கான ஊட்டச்சத்து முறைகள், மாரடைப்பு. புற்றுநோய் ஆகியன பற்றி
வெளியிட்டுள்ளது. மேலும் கொழும்பு, பால்வினை நோய் (எய்ட்ஸ்)
முதலான அனைத்து வகையான நோய்கள் பற்றியும் ஒவ்வொரு மாதமும் வெளியிட்டு மக்களின்
மருத்துவ சேவையில் சிறந்த பங்களிப்பை வழங்கிகொண்டிருகின்றதென்பது
இதன் மூலம் அறியலாகின்றது.
சான்றெண் விளக்கம்
1. இணையம் - மருத்துவம், தமிழ் விக்கிப்பீடிய, ப–1.
2. தே.ப.சின்னசாமி - தமிழ்நாட்டு மருத்துவம், ப-96.
3. முத்துச்செல்வக்குமார் - மருத்துவத் துறையில் புதிய முன்னேற்றங்கள்,
ப-42.
4. தே.ப.சின்னசாமி - மேலது, ப-19.
4. தே.ப.சின்னசாமி - மேலது, ப-19.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக