திங்கள், 19 அக்டோபர், 2020


மாத்தூர் ஐந்நூற்றீசுவரர் திருக்கோயிலும் தாவரங்களும்

       

        சு. பிரபாகரன் 


  (இக்கட்டுரை 2019செப்டம்பரில் அழகப்பா பல்கலைக்கழகத் தமிழ்த்துறையில் நடைபெற்ற திருக்கோயில்களும் தமிழ்ச்சமூகமும் என்னும் தேசியக் கருத்தரங்க ஆய்வுக்கோவையில் வெளியிடப்பட்டுள்ளது.) 

உலகில் தோன்றிய உயிரினங்களில் மனிதத் தோற்றம்தான் இறுதிபடிநிலையாகும். மனித இனம் தொடக்க காலத்தில் நாடோடி வாழ்க்கையையே மேற்கொண்டிருந்தது. பின்னர் மலைகளிலும், குகைகளிலும், நதிக்கரைகளிலும் தங்கி நிலையான வாழ்க்கையை வாழத் தொடங்கியது. நாடோடி வாழ்க்கையில் இயற்கையோடு இயைந்து வாழ்ந்தனர்இயற்கையால் ஏற்படும் இடி, மின்னல், மழை, வெள்ளம் போன்ற இடர்பாடுகளால் பெரிதும் அச்சம் கொண்டனர். இவை அச்சத்தையும், துன்பத்தையும் போக்கித் தங்களை அவற்றிலிருந்து காத்துக்கொள்ள இயற்கையை வழிபடத் தொடங்கினர். இவ்வாறு தோற்றம் பெற்ற வழிபாட்டின் வளர்ச்சி நிலையே இன்று காணப்படும் திருகோயில்களின் வழிபாடுகளும் விழாக்களுமாகும். இவ்வகையில் மாத்தூர் ஐந்நூற்றீசுவரர் திருக்கோயிலும் தாவரங்களும்என்னும் தலைப்பிலான இக்கட்டுரை இத்திருக்கோயிலில் காணப்படும் தாவரங்கள் பற்றி விளக்குவதாய் அமைகின்றது

திருக்கோயில்களும் தாவரங்களும்

 

        திருக்கோயில்கள் இறை வழிபாட்டின் உன்னதமான இடமாகும். இவை தெய்வங்களை உள்ளுறைத்து எழுப்பப்படுகின்றன. தெய்வ வழிபாடு பழங்காலம் முதல் தொன்றுதொட்டுவரும் ஒரு தொல் மரபாகும். மனிதர்களால் உருவாக்க இயலாத அனைத்துச் சக்திகளையும் இயற்கை எனலாம். இவ்வழிபாடு நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம், ஞாயிறு, திங்கள், விலங்குகள், பறவைகள் போன்றவற்றை வழிபடுவதாகும். இதனை இயற்கை வழிபாடு என்றும் கூறுகின்றனர். திரு. வி. வழிபாடாவது இறைவனை எட்டு வடிவமாகப் போற்றுவது. அவ்வெட்டாவன; நிலம் நீர் நெருப்பு காற்று வெளி திங்கள் ஞாயிறு உயிர் என்பன1 என்கின்றார்.

 

          இறைவன், கடவுள் உறையுமிடமாகக் காணப்படும் திருக்கோயில்கள் மிகப் பழங்காலந் தொட்டே, இந்தியாவில் வழிபாட்டு இடங்களாகவும் சமய நிறுவனங்களாகவும் திகழ்ந்துவருகின்றன. அறிவியல், நாகரிக வளர்ச்சி இல்லாத பழந்தமிழகத்தில் கடவுளர்களும் ஆவிகளும் உரையும் இருப்பிடமாகக் கருதி, மரங்களை வழிபடும் வழக்கம் இருந்துள்ளது. இவ்வாறு வழிபடப்பட்ட மரங்கள் ஆல், அரசு, இரட்டி, இலஞ்சி, கடம்பு, பலா, வாகை, வன்னி, வெள்ளி, வேம்பு, வேங்கை போன்றவைகளாகும். மரங்களைத் தெய்வமாக வழிபட்ட பழங்காலத் தமிழர்கள் கால வளர்ச்சியின் காரணமாகத் தெய்வங்களை உருவ வழிபாடு கொண்டு அதற்கு இடத்தைத் தேர்வு செய்து அங்குக் கூடாரம், மண்டபம் அமைத்து வழிபட்டனர். இக்கூடாரங்கள் மற்றும் மண்டபங்கள் மரங்களாலானவை என்பதை இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.

 

          கால வளர்ச்சியின் காரணமாகக் இன்று கட்டுமானக் கோயில்கள் உருவாகினாலும், பழந்தமிழ் மரபில் தோன்றிய மர வழிபாடுகளை நினைவு கூறும் வண்ணம் கோயில்களில் இறைவனின் வாகனங்கள், தல விருட்சம் போன்றன மரங்களாகவே காணப்படுகின்றன. ஒவ்வொரு இறைவனுக்கும் ஒவ்வொரு மரம் தல விருட்சமாக இருப்பதை இன்றும் காணலாம். இவற்றைகடம்ப மரம் முருகனுக்குரியதாகவும், ஆலமரம் சிவனுக்குரிய இடமாகவும் கருதப்பட்டன2 என்ற செய்தியும், “சிதம்பரத்தில் தில்லை மரமும், திருவானைக்கா ஜம்புகேஸ்வரத்தில் நாவல் மரமும், காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில் மா மரமும், மதுரையில் கடம்ப மரமும் தல விருட்சங்களாகும்3 என்ற செய்தியும் உணர்த்துகின்றன.

 

          கடவுள் வழிபாட்டில் மரங்களுக்கு அடுத்த நிலையில் மலர்கள் இன்றியமையாதவையாகக் காணப்படுகின்றன. இம்மலர்களைத் திருக்கோயில்களின் சுற்றுபுறங்களில் பூஞ்சோலை என்னும் நந்தவனம் அமைத்தும் பெறுகின்றனர். தென்னை, மா, பலா போன்ற மரங்களிலிருந்து கிடைக்கும் தேங்காய், மாங்காய், பலா போன்றன வழிபாட்டிற்கும் திருக்கோயில் வருமானத்திற்கும் துணை செய்கின்றன. எனவே கடவுளர்கள் உறைந்திருக்கும் திருக்கோயில்களில் மரங்கள்களாகவும், மலர்களாகவும் தாவரங்கள் காணப்படுகின்றன. தாவரங்கள் கார்பன்டை ஆக்ஸைடை எடுத்துக்கொண்டு மனிதர்களுக்குத் தேவையான ஆக்சிஜனை வெளியிடுகின்றன.   சுற்றுச்சூழலையும் மாசுபடாமல் தடுக்கிறது. இத்தாவரங்களைத் திருக்கோயில்களிலிருந்து பிரித்தல் என்பது இயலாத ஒன்று என்பது இதன்வழி அறியலாகின்றது.

 

ஐந்நூற்றீசுவரர் திருக்கோயிலும் தாவரங்களும்

 

        வழிபாட்டு மரபில் திருக்கோயில்களில் தாவரங்கள் இன்றியமையாதவை. மாத்தூர் ஐந்நூற்றீஸ்வரர் திருக்கோயிலில் தாவரங்கள் பின்வருமாறு இடம் பெற்றுள்ளன. ‘மாத்தூர் ஐந்நூற்றீஸ்வரர் திருக்கோயில்சிவகங்கை மாவட்டம், காரைக்குடி வட்டம், மாத்தூர் என்னும் சிற்றூரில் காரைக்குடியிலிருந்து 7 கி. மீட்டர் தொலைவில் உள்ளது. பழங்காலம் முதல் இன்று வரை நகரத்தார்கள் வாணிபத்தில் சிறந்து விளங்குகின்றனர். இவர்கள் கடல் கடந்தும் தங்களது வாணிபத்தைப் பெருக்கியுள்ளனர். கூட்டம் கூட்டமாக கடல் கடந்த வாணிபத்தில் ஈடுபட்ட நகரத்தார்கள், ஒரு முறை ஐந்நூறு பேர் கூட்டமாகச் சென்றுள்ளனர். ஐந்நூறு பேர்களாகச் சென்ற இவர்களைத்திசை ஆயிரத்து ஐந்நூற்றீஸ்வரர்எனக் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. இதன் காரணமாக இவர்கள் வணங்கிய தெய்வத்தைஐந்நூற்றீசுவரர்என்றழைத்துள்ளனர்.

 

          ஐந்நூற்றீசுவரர் இத்திருக்கோயிலின் மூலவர் ஆவார். பெரியநாயகி அம்மன், கலங்காத கண்ட விநாயகர், ஆனந்த முனீஸ்வரர் முதலான தெய்வங்கள் இடம்பெற்றுள்ளன. இத்திருக்கோயிலில் 200 ஆண்டுகளுக்கும் முன் மூலவர், அம்மன், கலங்காத கண்ட விநாயகர் போன்ற தெய்வங்களுடன் வெள்ளைக் கல்லால் நிறுவப்பட்டது. இரண்டாவது திருப்பணி 1931 ஆம் ஆண்டு வாகனக் கொட்டகைகளை அமைத்ததிலிருந்து தொடங்கியது. பின் 1934 ஆம் ஆண்டு தொடங்கி 1949 ஆம் ஆண்டு பிப்ரவரி 2 ஆம் நாள் திருக்குட நன்னீராட்டு விழாவுடன் நிறைவுபெற்றுள்ளது. மூன்றாவது திருப்பணி 1974 ஆம் ஆண்டும், நான்காவது திருப்பணி 1988 ஆம் ஆண்டும், ஐந்தாவது திருப்பணி 2002 ஆம் ஆண்டும், ஆறாவது திருப்பணி 2015 ஆம் ஆண்டும் திருக்குட நன்னீராட்டு விழாக்கள் நடைப்பெற்றுள்ளன.

 

          திருப்பணிகளைக் கண்டு விளங்கும் மாத்தூர் ஐந்நூற்றீஸ்வரர் திருக்கோயில் குளத்தைச் சுற்றி வேம்பு, புங்கை, வில்வம், தென்னை ஆகிய மரங்களும் செவ்வரளிப் பூச்செடிகளும் குளமும் அழகு சேர்க்கின்றன. கோயிலின் முகப்பு மண்டபத்தின் இடப் புறத்தில் திருவோடு மரம், அத்தி, வில்வம், வேப்ப மரம் முதலான மரங்களும் செவ்வரளி, நந்தியாக்கொட்டை, ஆமணக்கு, வெள்ளெருக்கு முதலான பல்வேறு செடிகளும் அவற்றின் மலர்களும் திருக்கோயிலுக்கு அழகும் வலுவும் சேர்க்கின்றன. 

 

தல விருட்சம்

         

          இயற்கையோடு இயைந்து வாழ்ந்த முன்னோர்கள் இயற்கையை வழிபட்டதன் மூலம் அறிவியலை ஆன்மீகமாகப் பின்பற்றியுள்ளனர். இந்து திருக்கோயில்களில் இன்றியமையாதவையாகக் காணப்படுபவை மூர்த்தி, தலம், தீர்த்தம் மற்றும் தல விருட்சம் ஆகிய நான்கும் ஆகும். தல விருட்சமானது, நம் முன்னோர்கள் வழிபட்ட இயற்கைக் கூறுகளில் ஒன்றான மர வழிபாட்டை நினைவுகூறும் மரபு நீட்சியாகும். கொன்றை, வில்வம், வன்னி, மகிழம், ஆல் போன்றவை சிவனுக்குரிய தல விருட்சங்களாகவும்; சந்தனம், அத்தி போன்றவை விஷ்ணுக்குரியத் தல விருட்சங்களாகவும் விளங்குகின்றன. இவை தவிர கடம்பம், நெல்லி, இலந்தை, வேப்ப மரம் முதலானவைகளும் காணப்படுகின்றன.

 

இச்சிவதலத்தின் விருட்சம் மகிழ மரமாகும். இத்தல விருட்சம் மூலவரின் கருவறைக்கு முன் அமைந்துள்ள மண்டபத்தின் வலது புறத்தில் ஆனந்த முனீசுவரருடன் காணப்படுகின்றது. மகிழ மரம் நறுமணமுடைய பூக்களையும், தித்திக்கும் பழங்களையும் கொண்டு விளங்கும். ஆனால் இத்திருக்கோயிலில் காணப்படும் தல விருட்சமான மகிழ மரம்பூக்கும். ஆனால், காய்பதில்லை, மணப்பதில்லை4 என்கிறது தலபுராண நூல். அங்குக் காவலாளியாகப் பணிபுரிபவர்இம்மரத்தில் பழம் பழுத்திருக்கின்றது. நான் இளைவனாக இருக்கும் பொழுது நான் பறித்து திண்றிருக்கின்றேன்5 என்கின்றார். சிலர் மகிழ மரத்தில் இரண்டு வகையுண்டு. ஒன்று பூப்பூத்து, காய் காய்த்து பழமாகும். மற்றொன்று பூப்பூக்கும். ஆனால் காய் காய்த்து பழுப்பதில்லை என்கின்றனர். இத்தகைய சிறப்புடைய மகிழ மரமே மாத்தூர் ஐந்நூற்றீசுவரர் திருக்கோயிலில் தல விருட்சமாக வழிபடுவோருக்கு மகிழ்ச்சியைத் தருகின்றது.

 

நட்சத்திர மரங்கள்

       

                ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒவ்வொரு மரங்கள் சிறப்பு வாய்ந்ததாக ஆகம நூல்கள் குறிப்பிடுகின்றன. இவ்வகையில் அஸ்வினிக்கு எட்டி, பரணிக்கு நெல்லி, கார்த்திகைக்கு அத்தி, ரோகிணிக்கு அருநாவல், மிருக சீரிஷத்திற்குக் கருங்காலி, ஆதிரைக்குச் சந்தனம், புணர்பூசத்திற்கு மூங்கில், பூசத்திற்கு அரசம், ஆயில்யத்திற்குப் புன்னை, மகத்திற்கு ஆலம், பூரத்திற்குப் புரசு, உத்திரத்திற்கு அரளி, அஸ்தத்திற்கு ஆத்தி, சித்திரைக்கு வில்வம், சுவாதிக்கு மருதம், விசாகத்திற்கு விளா, அனுசத்திற்கு மகிழம், கேட்டைக்குக் குறும்பலா, மூலத்திற்கு மா, பூராட்டத்திற்கு வஞ்சி, உத்திராடத்திற்குப் பலா, திருவோணத்திற்கு எருக்கு, அவிட்டத்திற்கு வன்னி, சதயத்திற்குக் கடம்பம், பூரட்டாதிக்குக் கருமருதம், உத்திரட்டாதிக்கு வேம்பு, ரேவதிக்கு இலுப்பை ஆகிய 27 மரங்கள் நட்சத்திர மரங்களாக இடம்பெற்றுள்ளன. இந்நட்சத்திர மரங்கள் முகப்பு மண்டபத்திற்கு வலது புறத்தில் அமைந்திருப்பது இத்திருக்கோயிலுக்குத் தனிச் சிறப்பாகும். இதனை,

எட்டிமரம் அஸ்வினியின் மீனுக்காகும்

இனியபெரு நெல்லிமரம் பரணிக் காகும்!

அட்டியில்லா அத்திமரம் கார்த்தி கைக்கே!

அருநாவல் ரோகிணிக்கே உரிய தாகும்

மட்டில்லாக் கருங்காலி மிருக சீர்ஷம்

மணம்கொள்செஞ் சந்தனமோ ஆதி ரைக்கே!

முட்டிவளர் மூங்கில்மரம் புனர்பூ சம்மே!

முடியரசாம் அரசமரம் பூசத் திற்கே!

 

புன்னைமரம் ஆயில்யம் உரிமை யாகும்

புகழ்மிக்க ஆலமரம் மகத்திற் காகும்

பொன்னான புரசுமரம் பூரத் திற்கே!

புகழ்அரளி உத்திரவிண் மீனுக் காகும்

சின்னமெனும் ஆத்திமரம் ஹஸ்தத் திற்கே!

சிறப்பான வில்மரம் சித்தி ரைக்கே!

தன்னிகரில் மருதமரம் சுவாதிக் காகும்!

தலையாய விளாமரமோ விசாகத் திற்கே!

 

மணக்கின்ற மகிழமரம் அனுஷத் திற்கே!

மண்ணுக்குள் குறும்பலாவோ கேட்டைக் காகும்

கணக்கில்லா மாமரமோ மூலத் திற்கே!

கலங்காத வஞ்சிமரம் பூரா டம்மே!

குணக்குன்றாம் பலாமரமோ உத்தி ராடம்!

கோலமிகும் எருக்கமரம் திருவோ ணம்மே!

வணக்கமிகு வன்னிமரம் அவிட்ட மாகும்!

வளமான கடம்பமரம் சதயம் ஆகும்!

 

அசையாத கருமருதபூரட் டாதி!

அற்புதமாம் வேம்புமரம் உத்திரட் டாதி!

இசைவான இலுப்பைமரம் ரேவ திக்கே!

இருபத்தேழ் விண்மீன்கள் விண்ணை ஆள

விசையான விருட்சங்கள் மண்ணை ஆளும்6

என்ற பாடல்வழி உணரலாம்.

 

தோட்டங்கள் (நந்தவனம்)

 

          ஐந்நூற்றீஸ்வரர் திருக்கோயிலில் பல்வேறு மரங்கள் காணப்பட்டாலும், கோயிலின் பின்புறம் தோட்டங்கள் அமைக்கப்பெற்றுள்ளன. இத்தோட்டத்தில் நாகலிங்கம், மனோரஞ்சிதம், மல்லிகை, செம்பருத்தி, அரளி முதலான பூஞ்செடிகளும்; தென்னை, மா, வேம்பு போன்ற மரங்களும் பசுமையோடு அழகுறக் காணப்படுகின்றன. இங்கு முப்பதிற்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் காணப்படுவது குறிப்பிடத்தக்கது. இங்குள்ள தாவரங்கள் அவற்றின் பாகங்கள் ஐந்நூற்றீஸ்வரர் வழிபாட்டிற்கும்; திருக்கோயில் கட்டடங்களுக்கு வெப்பத்தைத் தணித்துக் குளிர்ச்சியூட்டி கட்டடங்களின் வலிமைக் காலத்தை நீட்டிப்பதாகவும் விளங்குகின்றன.


முடிவுரை

 

          பழந்தமிழர்கள் இயற்கையோடு இயைந்து தங்கள் வாழ்வையும் இயற்கையாய் அமைத்து கொண்டனர். தங்களுக்கு நேரும் அச்சத்திற்கும், துன்பத்திற்கும் இயற்கையே காரணம் என்றுணர்ந்து ஞாயிறு, திங்கள், நெருப்பு, மரம், நாகம் போன்ற இயற்கையை வழிபட்டனர். இதன் தொடர் வளர்ச்சியாகக் குகைகளைக் குடைந்தும், கற்களாலும் கட்டுமானக் கோயில்களை எழுப்பி இறை வழிபாட்டை மேற்கொண்டனர். நாகரிகத்தால் திருக்கோயில்கள் பல்வேறு வளர்ச்சிகளை அடைந்தாலும், இயற்கை வழிபாட்டில் மர வழிபாட்டின் நீட்சியாகத் திருக்கோயில்களில்தல விருட்சம் வழிபாடுஎன்பது இன்றும் தொடர்கின்றது. திருக்கோயில்களுக்கு அழகும் வலிமையும் சேர்க்கும் தாவரங்கள் அறிவியல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, ஆன்மீகக் கூறுகளுடன் காணப்படுகின்றன. மாத்தூர் ஐந்நூற்றீஸ்வரர் திருக்கோயிலும் பல்வேறு தாவரங்களைக் கொண்டு அழகும் வலிமையும் பெற்றுச் சிறப்பு வாய்ந்ததாய் காணப்படுகின்றது.

 

சான்றெண் விளக்கம்

 

1.   திரு. வி. கலியாணசுந்தரனார், முருகன் அல்லது அழகு, .65.

2.   கே. ஆர். சீனிவாசன், தென்னிந்தியக் கோயில்கள், .7.

3.   மேலது, .10.

4.   என். சொக்கலிங்கம், மாத்தூர் நகரக் கோயில், .12.

5.   நேர்காணல், செ. காத்தலிங்கம், கோயில் காவலாளி, வயது-70.

6.   என். சொக்கலிங்கம், மேலது, பக்.34-35.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக