திங்கள், 19 அக்டோபர், 2020

திருநீலகண்டப் பிள்ளையார் திருக்கோயில் திருவிழாக்களும் சமூக ஒற்றுமையும்


திருநீலகண்டப் பிள்ளையார் திருக்கோயில் திருவிழாக்களும் சமூக ஒற்றுமையும்

சு. பிரபாகரன் 


(இக்கட்டுரை 2019அக்டோபரில் அழகப்பா பல்கலைக்கழகத் தமிழ்த்துறையில் நடைபெற்ற சமூக நல்லிணக்கத்திற்குத் திருக்கோயில்களின் பங்களிப்பு என்னும் பன்னாட்டுக் கருத்தரங்க ஆய்வுக்கோவையில் வெளியிடப்பட்டுள்ளது.) 

மனிதர்கள் அன்றாடம் அவரவர் நிலைக்கேற்ப உழைத்துத் தன் வாழ்வை வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இவர்களுக்கு ஓய்வு, மகிழ்ச்சி என்பது மிகவும் அரிதாகின்றது. தன் உள்ளத்தில் அடங்கி ஒடுங்கிக் கிடக்கும் மகிழ்ச்சிகளை வெளிப்படுத்த, மனிதனுக்குக் கிடைத்த பெரும் வாய்ப்புகளுள் ஒன்று விழாக்கள். விழாக்கள் மனித உள்ளத்தில் மகிழ்ச்சியையும் நல்லிணக்கங்களையும் ஏற்படுத்தும் ஆற்றல் வாய்ந்தவை. மனிதச் சமூகமானது பல சாதிகளையும், மதங்களையும், இனங்களையும் உள்ளடக்கியது. இவ்வாறு காணப்படும் பல்வேறு சாதி, மத, இன மனிதர்களை ஒருங்கிணைக்கும் இணைப்புப் பாலமாக விழக்கள் திகழ்கின்றன. “நம் தமிழகத்தில் அன்று தொட்டு இன்று வரை கொண்டாடப்பட்டு வரும் விழாக்கள் பல. அவற்றை மூவகைப் படுத்தலாம். அவை: 1. வீட்டு விழாக்கள்; 2. கோயில்களில் கொண்டாடப்பெறும் திருவிழாக்கள; 3. பிற விழாக்கள் என்பன.”1 இவ்விழாக்களில் இரண்டாவதாகக் காணப்படும் கோயில்களில் கொண்டாடப்படும்திருவிழாக்கள்சிறப்பு வாய்ந்ததாகும். இத்திருவிழாக்கள் மனித உள்ளத்தில் வேற்றுமைகளைக் களைத்து ஒற்றுமைகளை உண்டாக்குகின்றன. இதனடிப்படையில் பேராவூரணி திருநீலகண்டப் பிள்ளையார் திருக்கோயில் திருவிழாக்கள் பேராவூரணி வட்டத்தில் வாழும் பல சாதி, மத, இன மக்களிடத்தில் எவ்வாறு ஒற்றுமையை ஏற்படுத்துகின்றன என்பதைக் கண்டறிவது இக்கட்டுரை நோக்கமாகும்.

 

திருவிழாக்களும் சமூக ஒற்றுமையும்

           

திருவிழாக்கள் என்பன கோயில்களில் கொண்டாடப்பெறும் சிறு, பெருவிழாக்களாகும். தீப கற்ப இந்தியா பல மதம், பல மொழி, மக்களைக் கொண்ட நாடாகும். பல மத வழிபாட்டுத் தலங்களும் காணப்படுகின்றன. இதில் குறிப்பாக இந்துக் கோயில்கள் மிகுதியானவை. குறிப்பாகத் தமிழகத்தில் இந்துக்கள் கோயில்கள் மிகுதியாகக் காணப்படுகின்றன. கிறித்துவத் தேவாலயங்களும், இஸ்லாமிய மசூதிகள், தர்க்காக்களும் காணப்படுகின்றன. இவ்வழிபாட்டுத் தலங்களாகியக் கோயில்களில் ஆண்டுதோறும் சிறு, பெருந்திருவிழாக்கள் நடைபெறுகின்றன. இப்பெருந்திருவிழாப் பற்றிஅண்டுக்கு ஒருமுறை நடைபெறும் திருவிழாவை மகோற்சவம் என்றும் பிரம்மோற்சவம் என்றும் கூறுவர். பிரம்மோற்சவம் என்பதற்கு பெரிய திருவிழா என்றும் பொருள்2 கூறுவர் எனபர் ரெ. சண்முகவள்ளி. இப்பெருந்திருவிழாக்கள் தமிழகத்தில் பல கோயில்களில் அதிச் சிறப்பாக நடைபெறுகின்றன.

 

            தமிழகத்தில் ஆண்டுதோறும் பல கோயில்களில் பெருந்திருவிழாக்கள் சிறப்பாகக் கொண்டாப்படுகின்றது. அவற்றுள் குறிப்பிடத்தக்கதுமதுரைச் சித்திரைத் திருவிழாவும், பழனி பங்குனி உத்திரமும், திருவண்ணாமலை கார்த்திகைத் தீபமும், சென்னை கபாலி கோயிலில் நடைபெறும் அறுபத்து மூவர் திருவிழாவும், திருவையாற்றில் நடைபெறும் சப்தஸ்தானமும் மற்றும் அப்பர் காட்சியும், திருத்தணிகை ஆடிக் கிருத்திகைத் திருவிழாவும்3 ஆகும். இதேபோல் அன்னை வேளாங்கன்னி மாதாக் கோயில் திருவிழாவும், நாகூர் தர்காவில் நடைபெறும் கந்தூரியும் கிறித்துவ, இஸ்லாமியர்களின் பெருந்திருவிழாக்களாகக் கொண்டாடப்படுகின்றன. இப்பெருந்திருவிழாக்களன்றி பொங்கல், மாசிமகம், உத்திரம், விசாகம், ஆனித் திருமஞ்சணம், ஆடிப்பெருக்கு, விநாயகர் சதுர்த்தி, தீபாவளி, திருக்கார்த்திகை போன்ற இந்து விழாக்களும்; ஆங்கிலப்புத்தாண்டு, புனித வெள்ளி, கிறித்துமஸ் முதலான கிருத்துவ விழாக்களும்; பக்ரீத், மொஹரம், இரம்சான், மிலாடிநபி போன்ற இஸ்லாமிய விழாக்களும் கொண்டாடப்படுகின்றன.

 

இவ்வாறு கொண்டாடப்பெறும் இந்து, கிறித்துவ, இஸ்லாமிய மதக் கோயில் திருவிழாக்கள் இம்மத மக்களிடையே காணப்படும் பிளவுகளைப் போக்கி நல்ல உறவுநிலையை ஏற்படுத்துகின்றன. இந்துக் கோயில்களில் கிறித்துவ, இஸ்லாமியர்கள் வழிபடுவதும்; கிறித்துவக் கோயில்களில் இந்து, இஸ்லாமியர்கள் வழிபடுவதும்; இஸ்லாமியக் கோயில்களில் இந்து, கிறித்துவர்கள் வழிபடுவதும் குறிப்பிடத்தக்கது. எனவே சாதி, மத, இனப் பிளவுகளற்ற மனிதச் சமூகத்தை உருவாக்குவதில் கோயில்களும் திருவிழாக்களும் இன்றியமையாதவையாக அமைகின்றன.

 

திருநீலகண்டப் பிள்ளையார் திருக்கோயில் திருவிழாக்கள்

         

திருநீலகண்டப் பிள்ளையார் திருக்கோயில் தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வட்டத்தில் முடப்புளிக்காடு என்னும் சிற்றூரில் அமைந்துள்ளது. இவ்வூர் தற்பொழுது பேராவூரணி நகரப் பகுதியோடு இணைந்து காணப்படுகின்றது. பேராவூரணி வட்டத்தில் 63 ஊராட்சிகளும் நான்கு வருவாய் சரகமும், 86 வருவாய்க் கிராமங்களும் உள்ளன. பேராவூரணி வட்ட அனைத்துச் சாதி, மத, இன மக்களுக்கும் இத்திருக்கோயில் பொதுவாய்க் காணப்படுகின்றது. இத்திருக்கோயில் 400 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்தது. இதனைஅருள்மிகு நீலகண்டப்பிள்ளையார் கோயில் சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பெற்றது4 என்ற செய்தி மூலம் தெளியலாம். இத்திருக்கோயிலுக்கு வழிபாடு (பூசை) செய்யும் உரிமை சங்கரர் வகையறாக்களுக்கு மட்டுமே உண்டு.

 

            திருநீலகண்டப் பிள்ளையார் திருக்கோயில் பல வரலாற்றுச் சிறப்புக்களைக் கொண்டுள்ளது. அவற்றுள் குறிப்பிடத்தக்கது மராட்டிய மன்னர்களான துளசேந்திர மகாராசாவின் அமைச்சர் மற்றும் இரண்டாம் சரபோஜி ஆகியோர் அருள்பெற்றது. 1763 – 1787 இல் தஞ்சைத் தரணியை ஆண்ட துளசேந்திர மகாராசாவின் அமைச்சர் ஒருவருக்குத் தீராத பெருந்நீரிழிவு நோய் ஏற்பட்டது. அதனைக் குணப்படுத்த சித்த மருத்துவத் திருத்தலமான திருப்பெருந்துறைக்கு (ஆவுடையார்கோயில்)  பேராவூரணி வழியாகச் சென்றனர். செல்லும் வழியில் பேராவூரணியில் கூரைக் கொட்டகையில் அமைந்திருந்த நீலகண்டப் பிள்ளையாருக்கு இரு அர்சகர்கள் வழிபாடு (பூசை) செய்ததைப் பார்த்த அமைச்சர் மற்றும் அமைச்சரின் பரிவாரங்கள், உடனே அமைச்சருக்கு ஏற்பட்ட நீரிழிவு நோய் பற்றிக் கூறி நீலகண்டப் பிள்ளையாரை வழிபட்டனர். வழிபட்டவுடன் அமைச்சருக்கு இருந்த தீராத பெருந்நீரிழிவு நோய் குணமடைந்து விட்டதாகவும்; இதற்காக துளசேந்திர மகாராசா 12 வேலி நிலங்களை இத்திருக்கோயிலுக்குத் தானமாக எழுதிக் கொடுத்ததாகவும் கூறுகின்றனர். இதனைதனது அமைச்சருக்கு நீண்ட காலமாக இருந்துவந்த நீரிழிவு நோய் குணமாகியதால் திருக்கோயிலுக்கு அருகாமையில் இருந்த 12 வேலி நிலத்தினைத் தானமாக நீலகண்டப் பிள்ளையாருக்கு எழுதிக் கொடுத்து, தீராத வினை தீர்க்கும் திருநீலகண்டப் பிள்ளையார் என்று கூறி வணங்கினாராம்5 என்ற செய்தி உறுதி செய்கின்றது. அன்று முதல் நீலகண்டப் பிள்ளையார் தீராத வினை தீர்க்கும் திருநீலகண்டப் பிள்ளையார் என அழைக்கப்படுகிறார்.

 

            1798 – 1833 இல் தஞ்சையை ஆண்ட இரண்டாம் சரபோஜி மன்னருக்கு உடலில் அரிப்பு நோய் இருந்துள்ளது. தஞ்சாவூரிலிருந்து பேராவூரணி வழியாக இராமேஸ்வரம் சென்ற மன்னர், பேராவூரணியில் நீலகண்டப் பிள்ளையாரைதுளசேந்திர மகாராசாவின் அமைச்சருக்கு இருந்த நீரிழிவு நோயைக் குணப்படுத்தியது போல் தன்னையும் குணப்படுத்த வேண்டும்6 என வணங்கிப் புறப்பட்டுள்ளார். இராமேஸ்வரம் சென்ற மன்னர் இரண்டாம் சரபோஜிஇராமேஸ்வரத்திலிருந்து திரும்புவதற்குள் நோய் குணமடைந்தது என்றும்; அங்கிருந்து மன்னர் பேராவூரணி வந்து நீலகண்டப்பிள்ளையாரை வணங்கி, கோயில் நிவேதனங்களுக்காக 4 1/2 வேலி நிலத்தைத் தானமாக வழங்கினார்7 என்றும் கூறுவர். இத்தகு வரலாற்றுச் சிறப்புகளுடன் காணப்படும் திருநீலகண்டப் பிள்ளையார் திருக்கோயிலில் ஆரம்ப காலகட்டத்தில் ஒரு நாளைக்கு இரண்டு கால வழிபாடும்; ஆண்டிற்கு ஒருமுறை மூன்று நாள் பெருந்திருவிழாவும் நடைபெற்றுள்ளன. பின்னர் 1964 இல் 5 கலச கோபுரங்களுடனும் மற்றும் 1987, 2000, 2014 ஆகிய ஆண்டுகளில் பல்வேறு திருப்பணிகளுடனும் குடமுழுக்கு விழாவும் நடைப்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

 

பெருந்திருவிழா

         

திருக்கோயில்கள் என்றாலே நம் நினைவிற்கு வருவது திருவிழாக்களேயாகும். திருவிழாக்களில் பெருந்திருவிழாவே ஒவ்வொரு கோயில்களிலும் சிறப்பாகக் கொண்டாடப்பெறும். இப்பெருந்திருவிழாக்களில் உற்சவ மூர்த்தி உற்சவ நாட்களில் உலா வந்து மக்களுக்கு அருள்செய்வார். இவ்வகையில் பேராவூரணி திருநீலகண்டப் பிள்ளையார் திருக்கோயிலிலும் சித்திரை முழுநிலவு (சித்ரா பௌர்ணமியை) நாளைக் கணக்கிட்டு ஆரம்ப காலத்தில் 3 நாள்கள் நடைபெற்ற பெருந்திருவிழா, பிற்கால வளர்ச்சியில் காரணமாகவும் இந்து சமய அறநிலையத் துறையின் முயற்சியாலும் தற்பொழுது 12 நாள்களாகக் கொண்டாடப்பெறுகிறது. அதாவது சித்திரை முழுநிலவு நாளில் உற்சவ மூர்த்தி நீராடும் வகையில் அதைஃகு 9 நாள் முன்னர் காப்பு கட்டுவர். காப்பு கட்டிய நாள் முதல் காப்புக் கழற்றும் நாள் வரை இப்பகுதி மக்கள் பெரும்பாலும் வெளியூர்களில் தங்குவது கிடையாது, அசைவம் உண்பதில்லை. இக்காப்புக் கட்டும் உரிமை இக்கோயிலில் வழிபாடு செய்யும் சங்கரர் வகையறாக்களுக்கே உண்டு. காப்புக் கட்டிய இரண்டாம் நாள் முதல் 11 – ஆம் நாள் தெப்ப திருவிழா வரை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில் உற்சவ மூர்த்தி திருவீதி உலா வந்து அருள்புரிவார். இத்திருக்கோயிலில் உற்சவ மூர்த்தியாக உலா வருபவர் வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகன் ஆவார். ஏனெனில்உற்சவ மூர்த்தி உருவச்சிலை வடிவமைத்த பொழுது இக்கோயிலின் மூலவரான நீலகண்டப் பிள்ளையார் உருவ வடிவில் காட்சித் தரவில்லையாம். எனவே நீலகண்டப் பிள்ளையாரின் உத்தரவின் பேரில் வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகன் உருவச்சிலை வடிவமைக்கப்பெற்று பெருந்திருவிழாக் காலங்களில் உற்சவ மூர்த்தியாகக் காட்சியளிக்கின்றார்.”8

 

தேர்த்திருவிழா

           

இத்திருக்கோயிலின் பெருந்திருவிழா முதல் நாள் நிகழ்ச்சியாகக் காலையில் ஆகம விதிப்படி நல்ல நேரம் பார்த்து கொடியேற்றப்பெறும். இரவு 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் கோயில் வழிபாடு செய்யும் உரிமை உடையவர்களான சங்கரன் வகையார்களில் ஒருவருக்குக் காப்பு கட்டப்பெறும். முதல் நாள் இரவு முதல் மண்டகப்படி நெல்லரிசி வியாபாரிகளால் நிகழ்த்தப்பெறும் இன்னிசை நிகழ்ச்சி நடைபெறும். இரண்டாம் நாள் திருவிழா கோயில் வழிபாடு செய்பவர்களான சங்கரர் வகையறா மண்டகப்படியாகும். உற்சவ மூர்த்தி கேடக வாகனத்தில் உலா வருவார். மூன்றாம் நாள் திருவிழாவில் மண்டகப்படி பேராவூரணி பேரூராட்சி மண்டகப்படியாகும். உற்சவ மூர்த்தி காமதேனு வாகனத்தில் உலா வருவார். நான்காம் நாள் திருவிழா புகைவண்டி ஊழியர்கள் மண்டகப்படியாகும். உற்சவ மூர்த்தி பூத வாகனத்தில் உலா வருவார். ஐந்தாம் நாள் திருவிழா ஐந்து வீட்டார்கள் மண்டகப்படியாகும். இன்று உற்சவ மூர்த்தி அன்ன வாகனத்தில் உலா வருவார். ஆறாம் நாள் திருவிழா வெற்றிலை மற்றும் மீன் வியாபாரிகள் மண்டகப்படி. உற்சவ மூர்த்தி மயில் வாகனத்தில் உலா வந்து அருள்புரிவார். ஏழாம் நாள் திருவிழா கடைத்தெரு வியாபாரிகளின் வர்த்தக சங்க மண்டகப்படியாகும். இன்று உற்சவ மூர்த்தி ரிஷப வாகனத்தில் உலா வருவார். எட்டாம் நாள் திருவிழா முடப்புளிக்காடு ஊரார்கள் மண்டகப்படி. இன்று உற்சவ மூர்த்தி குதிரை வாகனத்தில் உலா வருவார்.

 

                திருநீலகண்டப் பிள்ளையார் திருக்கோயிலின் பெருந்திருவிழாக்களில் சிறப்பாகக் காணப்படுவது 9 – ஆம் திருவிழாவான தேர்த்திருவிழா, 10 – ஆம் திருவிழாவான தீர்த்தத் திருவிழா, 11 – ஆம் திருவிழாவான தெப்பத் திருவிழா ஆகியவையாகும். தேர்த்திருவிழாவன்று நள்ளிரவு 12 மணி முதல் (எட்டாம் நாள் முடிவு 9 – ஆம் நாள் தொடக்க நேரம்) மாலை 4 மணி வரை பேராவூரணி வட்ட மக்கள் நங்களது வேண்டுதல்களைப் பால்காவடி, பன்னீர் காவடி, புஷ்பகாவடி, மயில்காவடி, தொட்டிக்காவடி, சடல் காவடி மற்றும் அளகு குத்துதல் போன்றவற்றின் மூலம் நிறைவேற்றுவர். 4 மணி முதல் தேர் இழுக்கும் வரை பறவைக்காவடி எடுப்பர். பின்பு நல்ல நேரம் பாரத்து உற்சவ மூர்த்தி தேரில் அமர்ந்து உலா வருவார். இத்தேர் எந்தவொரு சாதி, மத, இன வேற்றுமையுமின்றி அனைவராலும் இழுக்கப்பெற்று உலா வரும். பல லட்சக் கணக்கான பக்தர்கள் இத்தேர் திருவிழாவினைக் கண்டு களிப்பர். இன்று நெடுஞ்சாலைத்துறை மண்டகப்படியாகும்.

 

தீர்த்தத்திருவிழா

         

பெருந்திருவிழாவின் 10-ஆம் நாள் தீர்த்தத் திருவிழாவாகும். இன்று சித்திரை முழுநிலவு நாளாகும். மாலை 6 மணியளவில் உற்சவ மூர்த்தி அலங்கரிக்கப்பட்ட மயில் வாகனத்தில் தீர்த்த மண்டபத்திற்கு வந்து நீராடுவர். நீராடிய பின் முதல் நாள் கொடியேற்றத்துடன் கட்டப்பெற்ற காப்பைக் கழற்றி விடுவர். இத்தீர்த்தத் திருவிழாவில் தேர்திருவிழாவிற்கு வந்த பல லட்ச பக்தர்களும் கலந்துகொண்டு மூலவர் மற்றும் உற்சவ மூர்த்தியின் அருளைப்பெற்றுச் செல்வர். 10-ஆம் நாள் வருவாய் துறையினர் மண்டகப்படி. உற்சவ மூர்த்தி அலங்கரிக்கப்பட்ட மயில் வாகனத்தில் கடைத் தெருக்கள் வழியாக வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்திற்குச் சென்று மறுநாள் அதிகாலை கோயிலுக்குத் திரும்புவார். சித்திரைத் திங்கள் முழுநிலவு நாளில் உற்சவர் நீராடி காப்பு கழற்றுவதால் இத்திருவிழா சித்திரைப் பெருந்திருவிழா என அழைக்கப்படுகின்றது.

 

தெப்பத்திருவிழா

           

சித்திரைப் பெருந்திருவிழாவின் 11-ஆம் நாள் தெப்பத்திருவிழா நாளன்று காலை 10 மணி முதல் 11 மணிக்குள் உற்சவ மூர்தியான முருகனுக்கு வள்ளி தெய்வானையோடு திருக்கல்யாணம் நடைபெறும். திருக்கல்யானம் முடிந்தவுடன் வருகை தந்த பகதர்களுக்கு அப்பளம், பாயாசத்துடன் விருந்தளிக்கப்பெறும். இரவு 2 மணிக்கு மேல் உற்சவ மூர்த்தி அலங்கரிக்கப்பட்ட தெப்ப வாகனத்தில் திருக்குளத்திற்குள் மூன்று முறை உலா வருவர். தெப்பத் திருவிழா அரசு ஊழியர்கள் மண்டகப்படியாகும்.

 

            சித்திரைப் பெருந்திருவிழாவின் இறுதியாக 12-ஆம் நாள் திருவிழாவான விடையாற்றி உற்சவம் நடைபெறும். இன்று வாழைப்பழ வியாபாரிகள் மண்டகப்படியாகும். காப்புக் கட்டிய முதல் நாள் திருவிழா முதல் விடையாற்றி உற்சவமாகிய 12-ஆம் நாள் திருவிழா வரை ஒவ்வொரு நாள் இரவும் அந்தந்த மண்டகப்படிக்காரர்களால் நட்சத்திர இசைக் கலைஞர்கள், நடனக் கலைஞர்கள், நடிகர்களைக் கொண்டு இன்னிச் நிகழ்ச்சி, நடன நிகழ்ச்சிகள், பட்டிமன்றங்கள், ஆன்மீகச் சொற்பொழிவுகள் திருக்கோயிலின் அருகாமையில் அமைத்திருக்கும் ஏகாந்த மேடையில் நடைபெறும். குறிப்பாக ஏழாம் நாள் திருவிழாவான வர்த்தகர் சங்கம் நடத்தும் கலை நிகழ்ச்சிகளில் சிறப்புப் பெற்ற பாடகர்கள், நடனக் கலைஞர்கள், நடிகர்கள் கலந்துகொண்டு சிறப்பாகக் கொண்டாடுவர். மேலும், தேர்திருவிழா, தீர்த்தத் திருவிழா, தெப்பத் திருவிழா ஆகிய மூன்று நாள்களிலும் கோயிலில் அமைந்துள்ள மேடைகள் தவிர தேரூந்து நிலையம், புகைவண்டி நிலையம், ஆவணம் சாலை, மகிழுந்து நிலையம் முதலான இடங்களிலும் கலை நிகழ்ச்சிகள் அதிச் சிறப்பாக நடைபெறும். இப்பன்னிரண்டு நாள் பெருந்திருவிழாவிலும் பேராவூரணி வட்டத்தைச் சார்ந்த அனைத்துச் சாதி, மத, இன மக்களும் எவ்வித வேறுபாடுகளுமின்றி கலை நிகழ்ச்சிகளைக் கண்டும், இறைவனின் அருளையும் பெற்றுச் செல்வர். இத்திருக்கோயில் பெருந்திருவிழாக்களில் கிறித்துவ, இஸ்லாமிய மக்களும் தங்களின் வேண்டுதல்களை நிறைவேற்றிக்கொள்வது குறிப்பிடத்தக்கது. இப்பெருந்திருவிழாவின்றி வைகாசி மாதம் விசாகம், ஆனித் திருமஞ்சணம், ஆவணியில் விநாயகர் சதுர்த்தி, புரட்டாசியில் ஆயுத பூசை மற்றம் விஜயதசமி,  ஐப்பசியில் தீபாவளி, கார்த்திகையில் திருக்கார்த்திகை எனப் பல விழாக்களும் நடத்தப்படுகின்றன. மார்கழி மாதச் சிறப்பு வழிபாடு, தைப் பொங்கல், தைப்பூச விழா, மாசிமகம், பங்குனி உத்திர விழாக்களும் இத்திருக்கோயிலில் கொண்டாடப்படுகின்றன.

 

முடிவுரை

            திருக்கோயில்களில் திருவிழாக்கள் நடத்தப்படுவது ஆகம விதிகளாகும். சிறு, பெருந்திருவிழாக்களும், மாதத் திருவிழாக்களும் அனைத்து வகையான சாதி, மத, இன மக்கள்களை எவ்வித பாகுகாடுமின்றி ஒற்றுமையோடு வாழ வழிவகுக்கின்றன. இதனடிப்படையில் பேராவூரணி வட்டம் முடப்புளிக்காடு என்னும் சிற்றூரில் அருள்புரிந்து கொண்டிருக்கும் தீராத வினை தீர்க்கும் திருநீலகண்டப் பிள்ளையார் திருக்கோயில்  பெருந்திருவிழாவும், மாதத் திருவிழாக்களும் பேராவூரணி வட்டத்திலுள்ள இந்து, கிறித்துவம், இஸ்லாமிய மக்களிடையே சாதி, மத, இன வேறுபாடற்ற ஒற்றுமையை நிலைநாட்டுகிறது.

 

சான்றெண் விளக்கம் 

 

1.    பொன்னி, தமிழகத்து திருவிழாக்கள் -1, . 21.

2.    ரெ. சண்முகவள்ளி, தூர்வாசபுரம் ஸ்ரீ பாதாளேச்சுவரர் திருக்கோயில் பூசை மரபுகள், . 90.

3.    பொன்னி, மேலது, பக். 22-23.

4.    மா. மணிகண்டன், அருள்மிகு நீலகண்டப் பிள்ளையார் திருக்கோயில் ஏந்தல்பேராவூரணி, . 7.

5.    பழனிவேல் சங்கரன், தகவலாளி, நீலகண்டப்புரம்.

6.    மா. மணிகண்டன், மேலது, . 11.

7.    சி. பக்கிரிசாமி, தகவலாளி, முடப்புளிக்காடு.

8.    கணேசன் சங்கரன், தகவலாளி, நீலகண்டப்புரம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக