தமிழ் - தமிழர் வளர்ச்சியில் பாரதிதாசனின் பங்கு
சு. பிரபாகரன்
(திசம்பர்
2016 அழகப்பா பல்கலைக்கழகத் தமிழ்த்துறையில் நடைபெற்ற கருத்தரங்கில் வெளிவந்த கட்டுரை)
நம் இந்தியப் பெருநாட்டை ஆங்கில ஆதிக்கத்தின்
பிடியிலிருந்து பெறுவதற்கு நம் நாட்டுத் தலைவர்களின் பங்கு இனறியமையாததாகும்.
இந்திய விடுதலைப் போராட்டத்திற்குத் தோற்றுவாயாய் இருந்தது 1857-இல் ஏற்பட்ட இந்தியப் பெருங்கலகமாகும். இதிலிருந்து ஏறத்தாழ
தொன்னூறு ஆண்டுகள் கழித்தே நம்நாடு 1947 ஆகஸ்டு 15-இல் விடுதலைப் பெற்றது. இக்காலக் கட்டத்தில் நம் இந்திய
நாடு மட்டும் ஆங்கிலேயரின் பிடியில் இல்லை. இந்திய மொழிகளும் ஆங்கிலேயர்களின் ஆங்கில மொழி
ஆதிக்கத்திற்கு உட்பட்டிருந்தது. ஆங்கிலேயர்களின் ஆட்சியில் எங்கும் ஆங்கிலம்
எதிலும் ஆங்கிலம் என்ற நிலைமையே நிழவி வந்தன. இதன்
காரணமாகவே இந்திய மொழிப் பற்றாளர்கள் தங்கள் மொழிகளை அழியா வண்ணம் காக்க இவர்களும்
கிளர்ச்சி மற்றும் போராட்டங்களில் குதித்தனர். இவற்றில் மூத்த மொழியான நம் தமிழ்
மொழியும் இதற்கு விதிவிலக்கல்ல. தமிழ் மொழிப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களில்
பாரதியார், வ.உ.சி., திரு.வி.க., டி.கே.சிதம்பரநாத முதலியார், ‘கல்கி’ கிருஷ்ணமூர்த்தி, மறைமலையடிகள், பாவேந்தர் பாரதிதாசன், தேவநேயப்பாவாணர், ம.பொ.சி., கி.ஆ.பெ.விசுவநாதம், தெ.பொ.மீ., தோழர் ப. ஜீவானந்தம், டாக்டர் மு.வ. முதலானோர் குறிப்பிடத்தக்கவராவர்.
இவர்களில் பாவேந்தர் பாரதிதாசன் தமிழுக்கும் தமிழ் மக்கள்
வளர்ச்சிக்கும் எவ்வாறு பங்காற்றியுள்ளார் என்பதை இக்கட்டுரை வழி அறிவோம்.
பாரதிதாசன்
பாவேந்தர் பாரதிதாசன் 1891 ஏப்ரல் 29-ஆம் நாள் திரு. கனகசபைக்கும் இலக்குமி அம்மையாருக்கும்
மகனாய்ப் பிறந்தார். தனது தொடக்கக் கல்வியை ஆசிரியர் திருப்புளிசாமி அய்யாவிடமும்;;
இலக்கணம், இலக்கியம், சித்தாந்தம், வேதாந்தம் போன்றப் பாடங்களை புலவர் பு.அ. பெரியசாமி மற்றும்
பெரும்புலவர் பங்காரு பத்தர் ஆகியோரிடம் கற்றார். 1908-இல் வல்லூறு வேணு நாயக்கர் வீட்டுத் திருமணத்தில்
தேசியக்கவிப் பாரதியாரைச் சந்திக்கும் வாய்ப்பு பாரதிதாசனுக்குக் கிடைத்தது.
இச்சந்திப்பு இருவருக்குமிடையே இணைபிரியா நட்பை உருவாக்கியது. தமிழுக்காகவும்
நாட்டிற்காகவும் போராடியப் பாரதியார், வ.வே.சு., டாக்டர் வரதராஜலு, அரவிந்தர் போன்றவர்களை 1910-இல் ஆங்கிலேயக் காவலர்கள் தேடிய பொழுது தன் பெற்றோருக்குத்
தெரியாமலேயே புகலிடம் கொடுத்தவர். 1920-இல் நடைப்பெற்ற இந்திய அறப்போராட்டத்தில் தன்னுடையப்
பங்களிப்பை நல்கியவர். திருவள்ளுவராண்டு 1978-இல் ம.பொ.சி., அவர்கள் தை 1-ஆம் நாளான பொங்கல் திருநாளைத் தமிழ்த் திருநாளாகக் கொண்டாட
ஒரு கூட்டறிக்கையைச் செய்தார். அக்கூட்டறிகையிலே பாரதிதாசன் கையெழுத்திட்டு தன்
ஆதரவை வழங்கினார். இவர் குடும்பவிளக்கு, பாண்டியன் பரிசு, இருண்டவீடு, தமிழச்சியின் கத்தி, சேரதாண்டவம், பிசிராந்தையார், அழகின் சிரிப்பு, குறிஞ்சித்திட்டு போன்றக் காப்பியங்களையும் இறவாப் புகழ்
பெற்ற என்னற்றப் பாடல்களையும் இயற்றியுள்ளார். இவர் இயற்றிய பிசராந்தையார் நாடகம்
சாகித்திய அகாதெமி பரிசுப் பெற்றது இங்குக் குறிப்பிடத்தக்கது. இவ்வாறு
தமிழுக்காகவும் தமிழர்க்காகவும் போராடியப் பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள் 1964 ஏப்ரல் 21-ஆம் நாள் இயற்கை எய்தினார்.
நம் இந்திய நாட்டு விடுதலைக்கும்;
தமிழ் மொழி-தமிழர் விடுதலைக்கும் போராடியக் காலக்கட்டத்தில்
(1891-1964)
வாழ்ந்தவர் பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள். விடுதலைக்காக
நாட்டுத் தலைவர்கள் போராடியப் பொழுது இந்திய நாட்டிற்காகவும்,
தமிழ் நாட்டிற்காகவும் அறப் போராட்டங்களில் பங்கேற்றவர்
பாரதிதாசன் ஆவார். ஆகவே பாதிதாசன் படைப்புகள் வழி தமிழ்-தமிழர் வளர்ச்சிக்கு
கூறியிருப்பனவற்றைக் கல்வி, கலைச்சொல் – நூலகப் பெருக்கம், மொழிப்பெயர்ப்பு, தனித்தமிழப் புரட்சி என்னும் உட்தலைக்புகளில்
கீழக்கண்டவாறுக் காண்போம்.
கல்வி
கல்வி என்பது மாந்தரின் உள்ளார்ந்த திறன்களை
வெளிக்கொணர்வதும்; பண்புடைய வாழ்வியல் நெறிகளை உருவாக்குவதுமென இன்றையக்
கலவியாளர்கள் கூறுகின்றனர். ஆகவே கல்வியறிவின் மூலமே தனிப்பட்ட மாந்தர்,
அவர் வாழும் சமூகம், மாநிலம், மொழி மற்றும் நாட்டின் பொருளாதார வளர்ச்சி அமையும்.
இக்கல்வியறிவில் தமிழர்கள் எல்லோரும் சிறந்து விளங்க வேண்டும் என்பதனைப்
பாரதிதாசன்,
“என்னருந் தமிழ்நாட் டின்கண்
எல்லோரும் கல்வி கற்றுப்
பன்னருங் கலைஞா னத்தால்
பராக்கிர மத்தால், அன்பால்
உன்னத இமமலை போல்
ஓங்கிடும் கீர்த்தி யெய்தி
இன்புற்றார் என்று மற்றோர்
இயம்பக் கேட்டிடல் எந்நாளோ!”
(பாரதிதாசன் பாடல்கள்)
என்னும்
பாடலடிகள் வழிக் கூறுகின்றார். இப்பாடலடியில் பாரதிதாசன் அவர்கள்,
என்னருந் தமிழ்நாட்டில் அனைவரும் கல்வி கற்று;
பல்துறைக் கலையறிவு, வீரம், அன்பு போன்றவற்றில் உயர்ந்த இமயமலை போல் தமிழர் உயர்ந்து
விட்டனர் என வேற்று மொழியினர், வேற்று நாட்டினர் கூறும் அளவிற்குத் தமிழர் கல்வியறிவில்
உயர வேண்டும். இச்செய்தியினை என்காதில் கேட்கும் நாள் எந்நாளோ! என்கின்றார்.
மேலும்,
“இன்பத் தமிழ்க்கல்வி யாவரும் கற்றவர்
என்றுரைக் கும்நிலை எய்தி விட்டால்
துன்பங்கள் நீங்கும், சுகம்வரும் நெஞ்சினில்
தூய்மை யுண்டாகி விடும்;;”
(பாரதிதாசன் பாடல்கள்)
என்ற
பாடலடிகள் வழி, இன்பமானத் தமிழ்க் கல்வியை அனைவரும் கற்று விட்டனர் என்ற நிலை
ஏற்பட்டுவிட்டால், தமிழர்களின் வாழ்வில் துன்பங்கள் நீங்கும்,
மகிழ்ச்சிப் பொங்கும், மனத்தில் தூய்மை உண்டாகும் என்கிறார். இவ்வாறாகத்
தமிழர்களுக்கு கல்வியின் இன்றியமையாமையைப் பாரதிதாசன் மேற்கண்ட பாடலடிகள் வழிக்
கூறுகின்றார்.
கலைச்சொல் -
நூலகப் பெருக்கம்
எந்தவொரு மொழியும் உலகில் நிலைத்து நிற்க வேண்டுமாயின்
அதற்கு அம்மொழியில் போதிய கலைச்சொல் பெருக்கமும், நூல்கள் அடங்கிய நூலகப் பெருக்கமும் இன்றியமையாததாகும்.
இவ்வகையில் தமிழைப் பயிற்று மொழியாக்குவதற்கும், அரசு அலுவலகங்களில் ஆட்சி மொழியாக்குவதற்கும் தமிழிலே கலைச்
சொற்களும் நூல்களும் அதிக அளவில் காணப்பட்டாலும், இதனை மேலும் உயர்த்திட பாரதியார் “சென்றிடுவீர் எட்டுத் திக்கும் கலைச்சொல்வங்கள் யாவும்
கொணர்ந்திங்கு சேர்ப்பீர்” என்றார். பாரதிதாசனோ,
“கைத்திறச் சித்தி ரங்கள்
கணிதங்கள் வான நூற்கள்
மெய்த்திற நுல்கள் சிறபம்
விஞ்ஞானம் காவி யங்கள்
வைத்துள்ள தமிழர் நூற்கள்
வையத்தின் புதுமை என்னப்
புத்தகச் சாலை எங்கும்
புதுக்குநாள் எந்த நாளோ?”
(பாரதிதாசன் பாடல்கள்)
என்கின்றார்.
இப்படலடியில், ஓவியம் முதலான கைத்திறத்தால் வெளிப்படுத்தும் சித்திரங்கள்,
கணிதங்கள், வான நூல்கள், மெய்த்திற நூல்கள் (தத்துவம்),
சிற்பம், விஞ்ஞானம், காவிய நூல்களை உலகம் வியக்கும் வண்ணம் புதிதாக நூலகங்கள்
தமிழகத்தில் அமைக்க வேண்டும். அச்செயல் நிகழும் நாள் எந்த நாளோ?
என்று வினவுகிறார் பாரதிதாசன். மேலும்,
“உலகுக்குத் தமிழ்மொழியின் உயர்வுதனைக் காட்டுவது
சொற்பெருக்கம்”
(பாரதிதாசன் பாடல்கள்)
என்று,
உலகிற்குத் தமிழ் மொழியின் சிறப்பையும்,
அதன் உயர்வையும் எடுத்துகூறுவது கலைச்சொற்களே என்கிறார்.
இவற்றை மனத்தில் கொண்டே இந்தியத் துணைக்கண்டத்தில் தமிழகத்திற்கெனத் தனியரசு
அமைந்தப் பின்னர் தமிழில் கலைச் சொற்களை உருவாக்கும் பணியை அரசே ‘தமிழ் வளர்ச்சி ஆராய்ச்சி மன்றத்தின்’
மூலம் மேற்கொண்டது. இத்தமிழ் வளர்ச்சி ஆராய்ச்சி மன்றத்
தலைவர் திரு ஜி.ஆர்.தாமோதரம் அவர்கள் தலைமையில் நியமிக்கப்பட்ட கல்லூரி தமிழ்க்
குழுவினர் விஞ்ஞானக் கலைகளான அரசியல்,
பொருளாதாரம், தத்துவம், புவியியல், உயிரியல், புள்ளியியல், வாணிகவியல், வேதியல், உளவியல், நிலவியல் போன்றவற்றிற்குத் தமிழில் கலைச் சொல் அகராதியை
உருவாக்கினர். இதனோடல்லாமல், தமிழில் நுல்கள் பெருகுவதற்கு வாய்ப்பாக கிராமப்
புறங்களிலும் நூல்களைப் பெருக்கி நூலகம் அமைப்பதற்கெனத் தமிழக அரசு ‘பொது நூலகச் சட்டம்’ ஒன்றை இயற்றி தமிழின் வளர்ச்சிக்குத் துணை நின்றமை இங்கு
குறிப்பிடத்தக்கது.
மொழிப்பெயர்ப்பு
இருபது - இருபத்தொன்றாம் நூற்றாண்டுகளில் வளர்ந்து வரும்
துறைகளில் மொழிப்பெயர்ப்புத் துறையும் ஒன்று. மொழி வளர்ச்சிக்கு
இன்றியமையாதனவற்றுள் மொழிப்பெயர்ப்பும் பெரும்பங்காற்றி வருகின்றது. ஒரு மொழ-pயில் உள்ள நூல்கள், பழக்க – வழக்கப் பண்பாட்டுக் கூறுகளைப் பற்றி அம்மொழி அறியாதவரும்
அறியும் வண்ணம் செய்வது இம்மொழிப்பெயர்ப்பாகும். இம்மொழிபெயர்ப்பு இல்லையெனில்
ஒருமொழி நூல்கள், அம்மொழி சார்ந்த சமூக நிகழ்வுகள்,
பழக்க – வழக்கப் பண்பாட்டுக் கூறுகள் அம்மொழி சார்ந் சமூகத்தினுள்ளே
புதைந்துவிடும். இது அம்மொழி வளர்ச்சியின் இன்றியமையாதத் தடையாhய்யமையும். ஆகவே ஒரு மொழி உலகில் நிலைப்பெற வேண்டின்;
அம்மொழி நூல்கள், வாழ்க்கை நிகழ்வுகள் உலகில் உள்ள அனைவரும் அறியும் வண்ணம்
மொழிப்பெயர்க்கப்படல் வேண்டும். இதனடிப்படையில் நம் தமிழ் மொழி உலகில் நிலைத்து
நிற்க வேண்டுமாயின் தமிழ் நூலகளில் உள்ள அனைத்து அறிவியல்,
தத்துவம், கணிதம் முதலானத் துறைகளின் செய்திகளை உலக மொழிகள்
அனைத்திலும் மொழிப்பெயர்க்க வேண்டும். இவற்றையே பாரதிதாசன்,
“தாயெழிற் றமிழை, என்றன்
தமிழரின் கவிதை தன்னை
ஆயிரம் மொழியிற் காண
இப்புவி அவாவிற் றென்ற
தோயுறும் மதுவின் ஆறு
தொடர்ந்தென்றன் செவியில் வந்து
பாயுநாள் எந்த நாளோ?
ஆரிதைப் பகர்வார் இங்கே.”
(பாரதிதாசன் பாடல்கள்)
என்றப்
பாடலில்,
எழிலுடைய என் தாய்த்தமிழால் தமிழர்களால் படைக்கப்பெற்ற
அனைத்து நூல்களையும் உலகில் காணப்படும் அனைத்து மொழிகளிலும் உலகறியும் வண்ணம்
மொழிப்பெயர்க்கப்பட வேண்டும். இவ்வாறு மொழிப்பெயர்கப்பட்ட செய்தி என் செவியில்
வந்துப் பாயும் நாள் எந்நாளோ? என்று வினவி, யார் இதைச் செய்வார் என்கிறார். பாரதிதாசனின் விருப்பப்படி
இன்று காணப்படும் உலக மொழிகளில் மிகவும் அதிகமாக மொழிப்பெயர்க்கப்பட்ட நூல் ‘திருக்குறள்’ என்பது நம் தாய்த்தமிழின் உலகளாவியப் புகழை
வெளிப்படுத்துகின்றது. இதனோடல்லாமல்,
“உலகியலின் அடங்கலுக்கும் துறைதோறும் நூற்கள்
ஒருத்தர் தயை இல்லாமல்
ஊரறியும் தமிழில்
சல சல வென எவ்விடத்தும்
பாய்ச்சிட வேண்டும்.”
(பாரதிதாசன் பாடல்கள்)
என்கிறார்.
மேற்கூறியப் பாடலடியில் தமிழ் நூல்களை உலக மொழிகள் அனைத்திலும் மொழிப்பெயர்கச்
செய்தப் பாரதிதாசன், இப்பாடலில் உலகில் காணப்படும் அனைத்துத் துறை தொடர்பானக்
கருத்துகளைக் கொண்ட நூல்களை ஒருத்தர் துணையின்றி தமிழர் அனைவரும் அறிந்துகொள்ளும்
எளியத் தமிழ் (ஊரறியும் - எளியநடையில்) நடையில் பிற மொழியிலிருந்து தமிழ் மொழிக்கு
மொழிப்பெயர்த்து உலக அறிவில் தமிழும் - தமிழரும் தலைச்சிறக்க வழிவகுக்க வேண்டும்
என்கின்றார். இதன்வழி மொழி வளர்ச்சிக்கும் அம்மொழி சார்ந்த சமூக (தமிழர்)
வளர்ச்சிக்கும் மொழிப்பெயர்ப்பு இன்றியமையாததென்பது புலனாகின்றது.
தனித்தமிழ்ப்
புரட்சி
தி.பி. இருபதாம் நூற்றாண்டில்;
வாழ்ந்தத் தமிழறிஞர் மறைமலையடிகள். இவர் தனித்தமிழ்
இயக்கத்தை தி.பி. 1947 (கி.பி. 1916) -இல் ஏற்படுத்தி தனித்தமிழ் வளர்ச்சிக்கு அயராது
பாடுபட்டவர். ஆகவே இவரைத் தமிழுலகம் தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை என்கிறது. இவர்
வாழ்ந்தக் காலக்கட்டத்தில் வாழ்ந்தப் புலவர்களில் பாவேந்தர் பாரதிதாசனும் ஒருவர்.
இவர் பிற மொழிக் கலப்பை முற்றிலும் தவிர்க்க அறவழியில் தன் படைப்புகள் வழிப்
போராடியவர். ஒரு மொழிச் சமூகத்தில் மற்றொரு மொழிக் கலப்பென்பது இயல்பான ஒன்று.
இதனைக்கூட பாரதிதாசன் கூடாது என்கிறார். இவற்றை மெயப்பிக்கும் வண்ணம்,
“அடிக்கடி உத்யோகம் என்பர் - அதை
அலுவல் என்றுரைத்திடு தம்பி
படிப்பது வாசித்தல் இரண்டில் - உன்
பழந்தமிழ் முன்னது தம்பி.”
(பாரதிதாசன் பாடல்கள்)
“உடுத்திடும் வேட்டியை வேஷ்டி –
என
உரைப்பதும் பெரும்பிழை அன்றோ?
தடுப்பினும் சாதமென்பார்கள் - அதைத்
தமிழினில் சோறென்று நீ சொல்.” (பாரதிதாசன் பாடல்கள்)
என்றப்
பாடல்கள் விளக்குகிறது. இப்பாடலில், மக்கள் பொதுவாக அலுவல் என்று கூறுவதில்லை அவற்றை உதயோகம்
என்றே கூறுகின்றனர். இதேபோல் தமிழ்ச் சொற்களான படித்தல்,
வேட்டி, சோறு ஆகியவற்றையும் வாசித்தல்,
வேஷ்டி, சாதம் என்கின்றனர். இந்த வடமொழிகளைத் தவிர்த்து தமிழ்
மொழியிலே அவற்றைக் கூறலாம் என்று தனித்தமிழ்ப் புரட்சியை முன்வைக்கிறார்
பாரதிதாசன். மேலும்,
“தாய்ப்பாலில் நஞ்செனவே தமிழில் வடமொழி
சேர்த்தல் தவிர்த்தல் வேண்டும்,
தமிழ்ப்புலவர் தனித்தமிழில் நாடகங்கள்
படக்கதைகள் எழுத வேணடும்.” (பாரதிதாசன் பாடல்கள்)
என்றப்
பாடல்வழி தமிழ் மொழியில் வடமொழியைச் சேர்ப்பது தாய்ப்பாலில் நஞ்சு கலத்தலுக்கு
ஒப்பாகுமாம். ஆகவே இதனைத் தவிர்த்தல் வேண்டுமென்கிறார். இன்று அனைத்துச்
செய்திகளையும் மக்களிடத்தில் எளிதில் கொண்டு சேர்ப்பது நாடகங்களும்,
திரைப்படங்களுமே. இந்நாடகங்களையும்,
திரைப்படங்களையும் தமிழிப் புலவர்கள் பிற மொழிக்
கலப்பின்றித் தனித்தமிழிலே எழுதுதல் வேண்டுமென்றுத் தமிழ்ப் புலவர்களுக்குக்
கட்டளையிடுகின்றார் பாரதிதாசன்.
இன்று நாம் உள்;ர்களிலும், நகரங்களிலும் வாணிக விளம்பரப் பலகைகள் பலக் காண்கின்றோம்.
அவ்விளம்பரப் பலகைகள் ஆங்கிலத்திலும் பிற மொழிகளிலுமே இருக்கின்றன. அண்மைக்
காலமாகத் திருமண நிகழ்வை அறிவிக்கும் விளம்பரத்துணி பெருகியுள்ளன. அவைகள்
எம்மொழியில் இருக்கின்றதென்பதை அறிவது எளிதானவையல்ல. ஆகவே இவை அனைத்திலும் அழகியத்
தனித்தமிழிலே அமையவேண்டும். அவ்வாரில்லையெனில் அவற்றை அகற்ற வேண்டுமென்றப்
பாரதிதாசன்,
“வாணிக விளம்பரப் பலகை –
அதில்
வண்தமிழ் இல்லாவிடில் கைவை
காண்கநீ திருமண அழைப்பைப் பிற
கலந்திருந்தால் அதைப் புய் புய்.” (பாரதிதாசன் பாடல்கள்)
என்னும்
பாடலடிகளில் கூறுகின்றார். பாரதிதாசனின் இத்தனித்தமிழ் முழக்கத்திற்குப் பிறகே ‘மெட்ராஸ் யுனிவர்சிட்டி’ என்று ஆங்கிலத்தில் இருந்தச் சென்னைப் பல்கலைக்கழகப்
பெயர்ப்பலகை டாக்டர் மால்கம் ஆதிசேஷய்யா அவர்கள் துணைவேந்தராக வந்தப் பின்னரே அது ‘சென்னைப் பல்கலைக்கழகம்’ என்றுத் தமிழிலே பெயர் சூட்டப்பட்டது. இவற்றை,
மேலும் தூண்டும் வண்ணமாகத் தமிழக அரசு அண்மையில்
திரைப்படங்களின் பெயர்கள் தமிழில் வைக்கப்பட்டால் அதற்கு வரிவிலக்குண்டு என்று
ஆணைப்பிறப்பித்தது. இதனால் சம்திங் சம்திங் (ளுழஅநவாiபெ ளுழஅநவாiபெ) என்றுப் பெயரிட்டத் திரைப்படம் பின்னர் ‘உனக்கும் எனக்கும்’ என்றுப் பெயர் மாற்றம் பெற்றது பாரதிதாசனின் தனித்தமிழ்ப்
புரட்சிக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாகும்.
முடிவுரை
தமிழகத்தில் சங்க காலத் தமிழர் ஆட்சியின்
வீழ்ச்சிக்குப்பின் வேற்று மொழியினர் ஆட்சிகள் ஒன்றன்பின் ஒன்றாகத் தோன்றியது.
இதன் விளைவாகத் தமிழ் மொழித் தலையெடுத்து வளரமுடியாத நெருக்கடிநிலைத் தமிழகத்தில்
ஏற்பட்டது. இந்நிலை களைந்து தமிழகத்தில் தமிழ் என்றும் ஆட்சி மொழியாக இருக்க
வேண்டுமென்றுக் கருதி தி.பி. இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த மொழிப் பற்றாளர்களான
ம.பொ.சி.,
திரு.வி.க., பாரதியார், பாரதிதாசன், தெ.பொ.மீ., மு.வ. போன்றோர் நேரடியாகவும், படைப்புகள் வழியாகவும் போராடினர். இதில் பாவேந்தர்
பாரதிதாசன் குறிப்பிடத்தக்கவர். இவர் தமிழுக்காகவும் தமிழர்க்காகவும் வாழ்ந்தவர்.
இவற்றைப் படைப்பின் வழியிலே பெற்றிடப் போரடியவர் பாரதிதாசன் என்பதைக் கல்வி,
கலைச்சொல் - நூலகப் பெருக்கம்,
மொழிப்பெயர்ப்பு, தனித்தமிழ்ப் புரட்சி என்னும் உட்தலைபுகளின் வழியும்,
“தமிழுக்கு வாழ்வதே வாழ்வதாகும்
தனக்கென வாழ்வது சாவுக்கொப்பாகும்.”
“சாகும் போது தமிழ்ப் படித்துச் சாக வேண்டும்
என் சாம்பல்தமிழ் மணந்து வேக வேண்டும்.”
(பாரதிதாசன் பாடல்கள்)
என்றப்
பாடலடிகள் வழியும் நாம் உணரலாம்.
குறிப்புதவி
நூல்கள்
1. கல்பனா தாசன் (தொ.ஆ) – பாரதிதாசன் பாடல்கள், பாவைப் பதிப்பகம், சென்னை, 2009.
2. ம.பொ. சிவஞானம் - விடுதலைக்குப்பின் தமிழ் வளர்ந்த வரலாறு,
பூம்புகார் பதிப்பகம், சென்னை, 2007.
3. ம.பொ. சிவஞானம் - புதிய தமிழகம் படைத்த வரலாறு, பூம்புகார் பதிப்பகம், சென்னை, 2009.
4. க. நெடுஞ்செழியன் - இந்தியப் பண்பாட்டில் தமிழும் தமிழகமும்,
மனிதம் பதிப்பகம், திருச்சி, 1989.
5. ச.வே. சுப்பிரமணியன் - மெய்யப்பன் தமிழ் அகராதி, மணிவாசகர் பதிப்பகம், 2006.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக