புதன், 6 செப்டம்பர், 2017

தமிழ் இலக்கணங்களில் சார்பெழுத்துக்களின் தன்மைகளும் மாற்றங்களும்

தமிழ் இலக்கணங்களில் சார்பெழுத்துக்களின்
தன்மைகளும் மாற்றங்களும்

                சு.பிரபாகரன்


உலகில் தோன்றிய தொன்மையான மொழிகளுள் எழிலும் எழுச்சியும் மிக்கது தமிழ்மொழி. தமிழ்மொழி தொல்காப்பியம்முதல் அறுவகை இலக்கணம்ஈறாக பல்வேறு இலக்கண நூல்களைப் பெற்றுள்ளது. இவற்றில் தொல்காப்பியம், நன்னூல், இலக்கண விளக்கம், தொன்னூல் விளக்கம், முத்துவீரியம், சுவாமிநாதம் முதலான இலக்கண நூல்களில் சார்பெழுத்துக்களின் தன்மைகளையும் மாற்றங்களையும் ஆராய்வதாய் இக்கட்டுரை அமைகின்றது.

சார்பெழுத்துக்களின் தன்மைகள்

தமிழ் எழுத்துக்களை முதலெழுத்துக்கள், சார்பெழுத்துக்கள் என்று தொல்காப்பியத்திற்கும் பின் தோன்றிய இலக்கண நூல்கள் பகுத்துக் கூறுகின்றன. சார்பெழுத்தானது உயிர் எழுத்துக்கள் போன்று தனித்தும், மெய்யெழுத்துக்கள் போன்று உயிருடன் கூடியும் வராமல் ஒரு மொழியைச் சார்ந்து வருதலால் இது சார்பெழுத்தாகும். இவ்வாறு தனித்து இயங்கும் தன்மையற்ற சார்பெழுத்துக்களை தொல்காப்பியர்,

                 “சார்ந்துவரி னல்லது தமக்கியல் பிலவெனத்
          தேர்ந்து வெளிப்படுத்த ஏனை மூன்றும்
          தத்தம் சார்பிற் பிறப்பொடு சிவணி
          ஒத்த காட்சியின் தம்மியல் பியலும்”  (தொல்.101)

என்கிறார்.

சார்பெழுத்துக்களின் பிறப்பு பற்றி கூற வந்த தொல்காப்பியர், மொழிக்கண் பிற எழுத்துக்களைச் சார்ந்து வருதலின்றித் தாமே தனித்தியங்கும் இயல்பில்லாதனவாகிய சார்பெழுத்துக்கள் தத்தமக்குச் சார்பாகிய எழுத்துக்கள் பிறப்பிடத்தே பிறக்கும் என்று சார்பெழுத்துக்களின் பிறப்பைக்கூறி, சார்பெழுத்துக்களுக்கெனத் தனி பிறப்பியல்பும், தனி இயக்க இயல்பும் இல்லை என்று கூறுகிறார். இவற்றிற்கு உரைகண்ட நச்சினார்க்கினியர் சில எழுத்துக்களைச் சார்ந்து தோன்றினல்லது தமக்கெனத் தோன்றுதற்கு ஓரியல்பிலவென்று ஆராய்ந்து வெளிப்படுத்தப்பட்ட எழுத்துக்கள் தம்முடைய பிறப்பியல்பு மூன்றினையுங் கூறுங்கால் தத்தமக்கு உரிய சார்பாகிய மெய்களது சிறப்பிடத்தே பிறத்தலோடு பொருந்தி நடக்கும்”1 என்கிறார். மேலும் எழுத்துக்களுக்கு மாத்திரை (ஒலி அளவு) கூறிய தொல்காப்பியர்,

  ‘மெய்யின் அளபே அறையென மொழிப’  (தொல்.11)
 என்று மெய்யெழுத்திற்கு அரை மாத்திரை எனக்கூறி,
              அவ்வியல் நிலையும் ஏனை மூன்றே’  (தொல்.12)

என்று சார்பெழுத்துக்களுக்கும் அரை மாத்திரை (ஒலி அளவு) எனக் கூறுகிறார். இவ்வாறாகச் சார்பெழுத்துக்கள் தமக்கென தனி இயக்க இயல்பும், தனி பிறப்பியல்பும், தனி மாத்திரையும் (ஒலியளவும்) இல்லாத தன்மைகளைக் கொண்டவையாக விளங்குகின்றன என்பது புலப்படுகிறது.

சார்பெழுத்துக்களின் மாற்றங்கள்

தொல்காப்பியம் முதலாக (முன்னுரையில்) கூறப்பட்ட சில தமிழ் இலக்கண நூல்களின் வாயிலாகச் சார்பெழுத்துக்கள் அடைந்துள்ள மாற்றங்களைப் பின்வருமாறு காண்போம்.

தொல்காப்பியம்

தமிழ் இலக்கண, இலக்கியங்களில் மிகவும் தொன்மையானது தொல்காப்பியம். இது தன்னிகரற்ற தமிழ் இலக்கண நூலாகவும் தாய்மை இலக்கண நூலாகவும் விளங்குகிறது. தொல்காப்பிய(ர்)ம் காலம் இன்றைக்கு இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகட்கு முற்பட்டதென்பர். கி.மு.எழுநூறு என்பது பலரது கொள்கை”2 இத்தொன்மையான தொல்காப்பியம்ஃ

                 “எழுத் தெனப் படுப
          அகரமுத னகர விறுவாய்
          முப்பஃ தென்ப
          சார்ந்துவரன் மரபின் மூன்றலங் கடையே”  (தொல்.1)

என்று எழுத்தெனப் படுவது அகரத்தை முதலாக கொண்ட பன்னிரண்டும், னகரத்தை இறுதியாக கொண்ட பதினெட்டும் ஆகிய முப்பதும் ஆகும். அது தனக்கு தனித்து இயங்கும் இயல்பின்றி பிறவற்றோடு சார்ந்து வரும் மரபையுடைய சார்பெழுத்துக்கள் மூன்றும் இல்லாவிடத்து என்ற கருத்தை முன்வைக்கிறது.  இளம்ப10ரணர் எழுத்தென்று சிறப்பித்துச் சொல்லப்படுவன அகரமாகிய முதலையுடையனவும் னகரமாகிய இறுவாயினையுடையனவுமாகிய முப்பதென்று சொல்லுப; சார்ந்து வருதலாகிய இலக்கணத்தினையுடைய மூன்றும் அல்லாவிடத்து மூன்றும் ஆனவிடத்து முப்பத்து மூன்று என்று சொல்லுப”3 என்கின்றார்.

இவற்றில் சார்ந்துவரன் மரபின்என்றதனால் தொல்காப்பியர் சார்பெழுத்துக்களை வெளிப்படையாய் கூறாது குறிப்பால் கூறிச் சென்றமை புலனாகின்றது. சார்பெழுத்துக்களைக் குறிப்பால் கூறியதோடு,

                 “அவைதாம்
          குற்றியலிகரம் குற்றியலுகரம் ஆய்தம் என்ற
          முப்பாற் புள்ளியும் எழுத்தோ ரன்ன”   (தொல்.2)

என்று சார்பெடுத்துக்களின் வகை மூன்று என்பதனையும் சுட்டுகிறார். இவ்வாறாகத் தொல்காப்பியத்தில் சார்பெழுத்துக்களும் அதன் வகைகளும் இடம்பெற்றிருப்பதை நாம் உணரலாம்.

நன்னூல்

தமிழ் எழுத்துக்களை முதலெழுத்துக்கள் சார்பெழுத்துக்கள் என்று வெளிப்படையாய் முதன்முதலில் எடுத்தியம்பிய நூல் நன்னூல். இதன்காலம் கி.பி.12ஆம் நூற்றாண்டாகும். நன்னூலார் எழுத்துக்களை முதல் எழுத்துக்கள் சார்பெழுத்துக்கள் என்றதனை,

                மொழிமுதற் காரண மாமணுத் திரளொலி
             எழுத்து முதல்சார் பெனவிரு வனகத்தே”  (நன்.58)

என்ற நூற்பாவின் மூலம் அறியலாம்.

  உயிர்மெய் யாய்த முயரள பொற்றள
             பஃகிய இஉ ஐஒள மஃகான்
           தனிநிலை பத்துஞ் சார்பெழுத் தாகும்”  (நன்.60)

என்ற நூற்பாவில் உயிர்மெய், ஆய்தம், உயிரளபெடை, ஒற்றளபெடை, குற்றியலிகரம், குற்றியலுகரம், ஐகாரக்குறுக்கம், ஒளகாரக் குறுக்கம், மகரக் குறுக்கம், ஆய்தக் குறுக்கம் என பத்து வகையான சார்பெழுத்துக்களை நன்னூலார் கூறுகின்றார். மேலும்,

  “உயிர்மெய் இரட்டுநூற் றெட்டுய ராய்தம்
                 …………………………………………..
             ஓன்றொழி முந்நூற் றெழுபா னென்ப”   (நன்.61)

என்ற நூற்பாவின் மூலம் உயிர்மெய்-216, முற்றாய்தம்-8, உயிரளபெடை-21, ஒற்றளபெடை-42, குற்றியலிகரம்-37, குற்றியலுகரம்-36, ஐகாரக்குறுக்கம்-3, ஒளகாரக்குறுகு;கம்-1, மகரக்குறுக்கம்-3, ஆய்தம்-2 ஆக மொத்தம் 369 சார்பெழுத்துக்களின் விரிகளையும் விளக்கியுள்ளார். தொல்காப்பியர் சார்பெழுத்தின் வகையை மட்டும் சொல்லிச் சென்றார். நன்னூலாரோ தொகை, வகை, விரிகளையும் விளக்கியுள்ளமை நினைவு கூறத்தக்கதாகும். தொல்காப்பியர் செய்கை யொன்றனையு நோக்கிச் சார்பெழுத்து மூன்றெனக் கருவி செய்தா ராகலின், இவ்வாசிரியர் (நன்னூலார்) செய்கையுஞ் செய்யுளியலு நோக்கிச் சார்பெழுத்துப் பத்தெனக் கருவி செய்தாரென்பதும் உய்த்துணர்க”4 என்றமை, தொல்காப்பியர் புணர்ச்சி விதிகளின்படி சார்பெழுத்து மூன்றெனவும், நன்னூலார் புணர்ச்சி விதிகளின்படியும், செய்யுள் ஈட்டல் அடிப்படையிலும் சார்பெழுத்தை பத்தென வகுத்தமையையும் சுட்டுகிறது. செய்கைஎன்பது புணர்ச்சி விதிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

இலக்கண விளக்கம்

இலக்கண விளக்கத்தின் ஆசிரியர்; நன்னூலாரின் எழுத்துப் பாகுபாடான முதல் சார்பு என்பவற்றில் ஒன்றிப்போனாலும் அதன் வகை விரிகளிலே சற்று வேறுபடுகின்றார் என்பதை,

  குற்றிய லிகரம் குற்றிய லுகரம்
          ஆய்தமொடு உயிர்மெய் ஈரளபு ஐஒள
          மஃகான் குறுக்கம் உள்ளுறுத்து ஒன்பதும்
           சார்பின் பால என்மனார் அவற்றுள்
          உயிர்மெய் இரட்டுநூற்று எட்டு உயிர் அளபுழ்
           ஒற்றளபு பதினொன்று ஒன்றுஒன்று ஏனைய
           ஆயிரு நூற்றுஎண் ணைந்தும் அதன் விரியே”  (இ.வி.5)
                                              
என்ற நூற்பா தெளிவுபடுத்துகிறது. இங்குச் சார்பெழுத்தின் வகையாகக் குற்றியலிகரம், குற்றியலுகரம், ஆய்தம், உயிர்மெய், உயிரளபெடை, ஒற்றளபடை, ஐகாரக்குறுக்கம், ஒளகாரக்குறுக்கம், மகரக்குறுக்கம் ஆகிய ஒன்பதையும்; விரியாக உயிர்மெய்-216, உயிரளபெடை-7, ஒற்றளபெடை-11, குற்றியலிகரம்-1, குற்றியலுகரம்-1, ஆய்தம்-1, ஐகாரக்குறுக்கம்-1, ஒளகாரக்குறுக்கம்-1, மகரக்குறுக்கம்-1 ஆகிய இருநூற்று நாற்பதையும் கூறுகின்றார். இவர் ஆய்தக்குறுக்கத்தை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை ஆய்தக்குறுக்கம் ஒன்றுளது என்றும் அதனொடு கூடச் சார்பெழுத்துப் பத்தாம் என்னும் அதன் விரித்தொகை முந்நூற்று அறுபத்தொன்பதாம் என்றும் கூறுவாரும் உளராலோ எனின் என்று காரணம் காட்டி மறுக்கிறார்5 என்பது மூலம் உணரலாம்.

தொன்னூல் விளக்கத்தின் ஆசிரியர் வீரமாமுனிவர் (தொ.வி.5) நன்னூலாரின் முதல், சார்பு என்ற பாகுபாட்டையும், சார்பெழுத்தின் வகை 10 என்பதையும் ஏற்றுக்கொண்டு சார்பெழுத்தின் விரியைச் சுட்டாமலே விட்டுச் சென்றுள்ளார்.

முத்துவீரியம்

தமிழில் இயற்றப்பெற்ற ஐந்திலக்கண நூல்களுள் ஒன்று. இதன் ஆசிரியர் முத்துவீர உபாத்தியாயர். காலம் கி.பி.19-ஆம் நூற்றாண்டாகும். முத்துவீர உபாத்தியாயர் சார்பெழுத்து பற்றி முன்னோர்களிடமிருந்து முற்றிலும் வேறுபடுவதை,

 ‘சார்புயிர் மெய்தனி நிலையிரு பாலன’   (மு.வீ.22)

என்ற நூற்பா சுட்டுகிறது. இதில் ஆசிரியர் சார்பெழுத்து, உயிர்மெய், ஆய்தம் என இரண்டு வகையாய் கூறியிருப்பது தொல்காப்பியரின் மூன்று வகையிலும், நன்னூலாரின் பத்து வகையிலும், வைத்தியநாததேசிகரின் ஒன்பது வகையிலும் சேராது தனித்து நிற்பது ஆராயத்தக்கதாகும்.

சுவாமிநாதம் இலக்கண விளக்கத்தை ஒட்டிக் கூறினும் அது கூறாத ஆய்தக் குறுக்கத்தையும் சேர்த்துக் கொண்டதால் வகை 10, விரி 241 என்று இலக்கண விளக்கத்தைக் காட்டிலும் ஒன்று எண் மிகையாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

முடிவுரை

தமிழ் இலக்கணங்களில் சார்பெழுத்துக்களைத் தொல்காப்பியம் மூன்றெனவும்; நன்னூல் பத்து எனவும், விரி முந்நூற்று அறுபத்தொன்பதெனவும்; இலக்கண விளக்கம் ஒன்பது எனவும், விரி இருநூற்று நாற்பதெனவும்; தொன்னூல் விளக்கம் பத்தெனக்கூறி விரி கூறாமலும், முத்துவீரியம் இரண்டென முன்னை நூல்களிலிருந்து முரண்பட்டும்; சுவாமிநாதம் இலக்கண விளக்கத்தை ஒன்றி வந்தாலும்; வகையிலும், விரியிலும் ஒன்று மிகைப்பட வந்துள்ளமை அதன் மாற்றங்களை வெளிப்படுத்துகின்றன. இவ்வாறு மாறுபட்டிருப்பினும், இவை அனைத்தும் தொல்காப்பியத்தைச் சார்ந்தே அமைந்திருப்பது அவற்றை நுண்மையாக நோக்கும் பொழுதே புலப்படும்.


சான்றெண் விளக்கம்

1.         ஞா.தேவநேயப்பாவாணர் - தொல்காப்பிய எழுத்ததிகாரம், நச்சினார்க்கினியர் உரை, ப.69.

2.   தமிழண்ணல் - புதிய நோக்கில் தமிழ் இலக்கிய வரலாறு, ப.294.

3.   கு.சுந்தரமூர்த்தி - தொல்காப்பிய எழுத்ததிகாரம், இளம்ப10ரணர் உரை, ப.25.

4.   ஆறுமுகநாவலர் - நன்னூல் மூலமும்விருத்தி உரையும், ப.43.


5.   ச.வே.சுப்பிரமணியன் - தமிழ் இலக்கண நூல்கள், ப.380.

மருத்துவப் பங்களிப்பில் கலைக்கதிர்

மருத்துவப் பங்களிப்பில் கலைக்கதிர் 

சு. பிரபாகரன்

     நாம் வாழ்ந்து வரும் அறிவியல் யுகத்தில் ஒரு பகுதியில் நிகழும் நிகழ்வினை வசிப்பிடத்திலிருந்து தெரிந்துகொள்ளுதல் என்பது இன்றியமையாத ஒன்று. இவற்றை மக்களின்முன் கொண்டுசெல்லும் தகவல் தொடர்பு சாதனங்களாக இதழ்களும், ஊடகங்களும் திகழ்கின்றன. இன்று இணையம், மின்னஞ்சல் போன்ற பல்வேறு வசதிகள் இருந்தாலும் இதழ்களே அனைத்து மக்களையும் சென்றடையும் தகவல் தொடர்பு சாதனமாகத் திகழ்கிறது. இவ்விதழ்களை நாளிதழ்கள், வாரஇதழ்கள், மாத இதழ்கள் என வகைப்படுத்தலாம். இவ்வகையில் 1948-ஆம் ஆண்டு பேராசிரியர் ஜி.ஆர். தாமோதரன் அவர்கள் நிறுவிய இதழ் கலைக்கதிர் அறிவியல் மாத இதழாகும். இவ்விதழில் மாதந்தோறும் அறிவியல் தொடர்பான வெளியீடுகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இவற்றில் குறிப்பிடத்தக்கது மருத்துவம் ஆகும். இம்மருத்துவம் பற்றிய செய்திகளைக் கலைக்கதிர் இதழின் மூலம் ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாக அமைகின்றது.

மருத்துவம்

     மனிதர்களைத் துன்பப்படுத்தும் அனைத்தையும் நோய்கள் என்கின்றோம். இந்நோய்கள் பல்வேறு வகையிலும் மனிதர்களைப் பாதிக்கின்றன. இவற்றைச் சரிசெய்யும் முயற்சியே மருத்துவம் ஆகும். இவற்றைத் தமிழ் விக்கிப்பீடியா "மருத்துவம் என்பது நோய்களைக் குணப்படுத்துவதற்கான கலையும், அறிவியலும் ஆகும். இது, நோய்த்தடுப்பு, குணப்படுத்துதல் போன்றவற்றின் மூலம் மனிதர்களின் உடல் நலத்தைப் பேணுதல், மீள்வித்தல் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்ட பல்வேறு உடல்நலம் பேணற் செயல்முறைகளை உள்ளடக்கும்''1 என்கிறது. இதனடிப்படையில் 2013- செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் வெளிவந்த கலைக்கதிர் அறிவியல் மாத இதழில் ஊட்டச் சத்துக்கள், மாரடைப்பு, புற்றுநோய் போன்ற மருந்துச் செய்திகளைப் பின்வருமாறு காண்போம்.



சரிவிகித ஊட்டச்சத்து

     நாம் நோயற்ற வாழ்வு வாழ்வதென்பது இன்று சவாலான ஒன்று. நோய்கள் நம்மை ஆளும் சக்திகளைப் பெற்றுவிட்டன. இந்நோய்களை மருத்துவத்துறையின் நோயியல் துறை இரண்டாகப் பகுக்கின்றது. அவை 1. பற்றாக்குறை நோய்கள், 2. தொற்று நோய்கள் ஆகியனவாகும். இவற்றில் தொற்று நோய்கள் பற்றாக்குறை நோய்களின் மூலமே பரவுகின்ற. இந்தப் பற்றாக்குறை நோயானது சரிவிகித ஊட்டச்சத்து இன்மையால் ஏற்படுகிறது. சரிவிகித ஊட்டச்சத்து என்பது நாம் அன்றாடம் உண்ணும் உணவில் மாவு, புரதம், விட்டமின்கள், கொழுப்பு, தாது உப்புக்கள் போன்ற சத்துக்களைத் தேவைக்கேற்ப சரிவிகிதத்தில் சேர்த்துக்கொள்வதாகும். இவ்வாறு சேர்த்துக்கொள்வதன் மூலம் பற்றாக்குறை நோய்களைப் போக்குவதோடல்லாமல் தொற்றுநோய்கள் வருவதும் முற்றிலும் தடுக்கப்படுகின்றன. இதனால் நோயற்ற வாழ்வு வாழ்வதென்பது சாத்தியமாகின்றது. இவற்றையே தே.ப.சின்னசாமி அவர்கள் "சரிவிகித உணவு முறை உடலை நலமாக வாழவைக்கும். அறுசுவையும் அன்றாட உணவில் சம அளவில் சேர வேண்டும். இதுவே சரிவிகித உணவு முறையாகும்"2 என்கிறார். இவற்றை வள்ளுவரும்மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின் ஊறுபாடு இல்லை உயிர்க்கு என்று கூறுகின்றார்.

கலைக்கதிரும் சரிவிகித ஊட்டச்சத்தும்.

     ஊட்டச்சத்துக்கள் மூலம் நாம் உயிர் வாழ்வதற்குத் தேவையான அனைத்துச் சக்திகளையும் பெறுகின்றோம். இவற்றைக் கலைக்கதிர் 2013 செப்டம்பர் மாத அறிவியல் இதழ் உணவின் சத்துக்கள் என்னும் தலைப்பின் மூலம் விவரிக்கின்றது. இதில் மனிதர்கள் ரோக்கியமாக வாழ்வதற்குத் தேவைப்படும் முக்கிய சத்துக்களான மாவுப்பொருட்கள், புரதம், கொழுப்பு, பதிமூன்று வகையான தாது உப்புக்கள்  வைட்டமின்கள் ஆகியவற்றில் என்னென்ன நன்மைகள், தீமைகள் உள்ளன; இவைகள் சராசரியாக மனிதர்களுக்கு எந்த அளவு தேவைப்படுகின்றன; இச்சத்துக்கள் எந்தெந்த உணவுப் பொருட்களில் மிகுந்துள்ளன என்பதை இவ்விதழ் சுட்டிக்காட்டுகின்றது. இவற்றிற்கு உதாரணமாக, வைட்டமின் ஏ கொழுப்பில் கரையும். வெப்பம் தாங்கும். நமது உடலில் 150 மி.கிராம் உள்ளது. காரட், ப்பாளி, பலா, பேரீச்சை, கீரைகளில் மிகுந்துள்ளது. நமது தினசரி தேவை 4000 முதல் 6000 அலகு வரை. இச்சத்துக்கள் குறைந்தால் கண்பார்வை நோய்கள் ஏற்படும் என்பதைச் சுட்டலாம். இதைப்போன்றே அனைத்து வகையான சத்துக்களையும் விளக்கி ரோக்கியத்துடன் கூடிய நல்வாழ்விற்கு இவ்விதழ் வழிவகுத்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.


இதய நோய்கள்

 மனிதர்களை உடனடியாக வியப்பிற்குள் தள்ளும் நோய்களுள் இதய நோயும் (Heart attack) ஒன்று. இவ்விதய நோய்களாக இதயவலி, மாரடைப்பு ஆகிய இரண்டையும் கூறலாம். இவ்விதய நோய்கள் பற்றி மருத்துவர் முத்துச்செல்வக்குமார் அவர்கள் "இதயம் சீராக சுருங்கி விரிந்து இயங்குவதற்கு,ற்குத் தேவையான ஆக்சிசனும் சக்தியும் இரத்தத்தின் மூலம் கிடைக்க வேண்டும். அந்த இரத்தத்தை எடுத்துச் செல்லும் இரத்தக் குழாய்களில் அதிக கொழுப்புப் படிவதால் அல்லது வயதாகின்ற போது இரத்தக் குழாய் தடித்து அதன் உள்பகுதி சுருங்கிவிடுவதால் இதயத்திற்குத் தேவையான இரத்தம் கிடைக்காமல் இதய நோய்கள் உண்டாகிவிடும்"3 என்கிறார். இந்த இதய நோய்கள் இந்தியாவில் ஒரு 30 ஆண்டுகளுக்கு முன்பு இளவயதினரிடையே மிக அரிதாகவே காணப்பட்டது. தற்பொழுது 30-40 வயதில் கூட இந்நோய் பரவலாகக் காணப்படுது இதன் அதிவேக தாக்கத்தை வெளிப்படுத்துகின்றது.

கலைக்கதிரில் இதய நோய்கள் பற்றி
     அதிவேகத்தில் மனிதர்களைத் தாக்கும் இதய நோய்கள் பற்றி கலைக்கதிர் (செப்டம்பர் - 2013 ) இதழானது ஹார்ட் அட்டாக் (Heart attack ) என்னும் தலைப்பில் மக்களிடம் உரையாடுகின்றது. இதில் இதயத்திற்கு இரத்தம் கொண்டு செல்லும் இதயத் தமனிகளில் கொழுப்பு படிந்து இரத்தம் தடைபடுவதாலும் தமனிக் குழாய்கள் தடித்து உள்வட்டம் குறுகிவிடுவதாலும் இதயத்திற்குத் தேவையான இரத்தமும் பிராண வாயுவும் குறைகிறது. இதனால் இதய வலி (Angina pectoris ) ஏற்படுகிறது; என்று இதய வலி பற்றியும், இதயத்திற்கு இரத்தத்தைக் கொண்டு செல்கின்ற இதயத் தமனி குழாய்களில்                      (coronary arteries) நாளடைவில் ஏற்படுகின்ற கொழுப்பு படிமங்கள் பெருகி அடைப்பை ஏற்படுத்துகின்றன. இதனால் இதயத்திற்குச் செல்லும் இரத்த ஓட்டம் தடைபடுகிறது. இக்காரணமாக தேவையான பிராணவாயு கிடைக்காததால் மாரடைப்பு என்னும் கொடிய நோய் ஏற்படுகின்றது என மாரடைப்புப் பற்றியும் சுட்டுகிறது. இவ்வடைப்பிற்கான காரணங்களாக இரத்தத்தில் அதிக கொழுப்புச் சத்து, உயர் இரத்த அழுத்தம், புகைபிடித்தல், உடல் பருமன், மன அழுத்தம், குறைந்துவிட்ட உடலுழைப்பு என்னும் சிறு சிறு உட்தலைப்புகளின் மூலம் விவரித்துள்ளது. இந்த அடைப்பைக் கரைக்க நாம் என்ன செய்ய வேண்டும், மாரடைப்பு ஏற்பட்டால் உடனே என்ன செய்ய வேண்டும் என்பன பற்றியும் எடுத்தியம்புகிறது. இவ்விதய நோய்களை விளைவிக்கும் கொழுப்புச் சத்து பற்றி 2013 அக்டோபர் மாத கலைக்கதிர் இதழ் கொலஸ்ட்ரால் என்னும் தலைப்பில் ஆலோசனை வழங்கியிருகின்றது.



புற்று நோயும் கலைக்கதிரும்

     நம்மை தாக்கும் உயிர்க்கொல்லி நோய்களில் குறிப்பிடத்தக்கது புற்றுநோய். மனித உடலானது பலவகை செல்களால் ஆனது. இயல்பாகவே உடலில் உள்ள செல்கள் வளர்ந்து, பிரிந்து உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளத் தேவையான பல செல்களை உருவாக்குகின்றன. சில வேளைகளில் உடலுக்குத் தேவையற்ற பல செல்கள் தோன்றுகின்றன. உடலில் உள்ள பழைய செல்கள் வெளியேறாமல் உடலிலேயே மிகுபடுகின்றன. இவ்வாறு மிகுபடும் செல்கள் திசுக்களின் கூட்டை ஏற்படுத்துகிறது. இத்திசுக்களின் கூட்டைத் தீங்கில்லா திசுக்களின் கூட்டம், கேடுவிளைவிக்கும் திசுக்களின் கூட்டம் எனப்பிரிக்கலாம். தீங்கில்லா திசுக்களின் கூட்டம் எந்த வித உபாதைகளையும் ஏற்படுத்துவதில்லை. இவற்றை உடலிலிருந்து அகற்றிவிடலாம். ஆனால் கேடு விளைவிக்கும் திசுக்களின் கூட்டமானது இயல்புக்கு மாறாக எந்தக் கட்டுப்பாடின்றி பிரிவுற்றுப் பெருகும். இவற்றையே நாம் புற்று நோய் என்கின்றோம். இவற்றை தே.பே.சின்னச்சாமி அவர்கள் " புற்று நோய் என்பது உடலில் வேண்டாத வளச்சிப் படைப்பாகும் இந்தப் புடைப்பு எந்தந்த இடங்களில் பற்றுகிறதோ அந்தப் பெயரில் வழங்கப்படுகிறது4 என்கிறார். இதனடிப்படையில் நாம் இரத்தப் புற்றுநோய், குடல் புற்றுநோய், மார்பகப் புற்றுநோய் என்று கூறுகின்றோம்.

     இந்தப் புற்றுநோய் பற்றி கலைக்கதிர் (அக்டோபர் 2013) இதழானது புற்று நோய் மற்றும் தடுப்பு முறைகள் என்னும் தலைப்பில் அலசி லோசிக்கின்றது. இவற்றில் புற்றுநோய் எதனால் வருகிறது? என்னும் உட்தலைப்பில், சாதாரணமாகச் செல்கள் ஓர் ஒழுங்கான முறையில் பிரிந்து வளர்ந்து பின் இறக்கின்றன. இம்முறையில் ஏதேனும் மாற்றம் அல்லது குறைபாடு நேருமானால் ஒழுங்கற்ற பிரிதல் நடைபெற்ற அச்செல் அழிந்து போகாமல் மேலும் பல செல்களை உற்பத்தி செய்கின்றது. இதனால் அசாதாரணமான செல்கள் தோன்றி உடல் இயக்கத்திற்குக் கட்டுப்படாமல் தன்னிச்சையாக இயங்க ஆரம்பிக்கின்றன என்று புற்று நோயின் உருவாக்கத்தை எடுத்துரைக்கின்றது.  புற்றுநோயின் அறிகுறிகள் என்ன? என்னும் உட்தலைப்பில் புற்றுநோயின் அறிகுறிகள் பற்றி விளக்கியுள்ளது. உதாரணமாக நம் தோலில் உள்ள மச்சம் மற்றும் மருவில் பெரிய மாற்றங்கள் வருவது தோல் புற்றின் அறிகுறியாகும். வாயின் உட்பகுதி மற்றும் நாக்கில் வெண்புள்ளிகள் தோன்றுவது வாய்ப்புற்றின் அறிகுறியாகும். தோடு நில்லாமல் தடுப்பு முறைகள் என்னும் உட்தலைப்பில் புகைப்பிடித்தால் நுரையீரல் புற்றுநோய் ஏற்படும். மேலும் வாய், தொண்டை, உணவுக்குழல், குரல்வளை, ஈரல் முதலியன பாதிப்படைகின்றன. ஆகவே புகைபிடித்தலைப் பற்றிய நினைப்பே கூடாது என்றும், காய்கறிகள் மற்றும் பழங்கள் நிறைய உண்பதால் மாரடைப்பு, புற்றுநோய், நீரழிவு மற்றும் இரத்தக் கொதிப்பு வராமல் தடுக்கலாம் என்றும், அதிகமான உடல் பருமனைக் குறைத்து ஊறுகாய் மற்றும் உப்பு நிறைந்த உணவுகளைத் தவிர்ப்பதன் மூலமும் புற்றுநோய் வராமல் தடுக்கலாம் என்றும் அறிவுறுத்துகின்றது.
முடிவுரை

     இன்று பல்வேறு கொடிய நோய்கள் பல்வேறு வகைகளில் நமக்கு ஊறுகளை விளைவித்துக் கொண்டிருக்கின்றன. இவற்றில் சில நோய்களை மட்டுமே மருத்துவத்தின் மூலம் குணப்படுத்த இயலும். சில நோய்களை வராமல் தடுக்க முடியுமே தவிர வந்தபின் தடுக்க இயலாது. ஆகவே நாம் நோய்களிலிலிருந்து விடுபடுவதற்கான வழிமுறைகளை அறிந்து அதன்படி வாழ்வோமேயானால் உயிரைப் பறிக்கும் எந்த நோயும் நம்மைச் சீண்டுவதில்லை. இவற்றை வள்ளுவர்எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை அதிர வருவதோர் நோய்என்கிறார். ஆகவே, நாம் நோய்கள் வருவதற்குமுன் அது பற்றிய ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் அறிந்து நோயின்றி வாழ்வதற்கு வழிவகுக்க வேண்டும். இவற்றை மனத்தில் கொண்டு அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில் கலைக்கதிர் - அறிவியல் மாத இதழானது நோயற்ற வாழ்விற்கான ஊட்டச்சத்து முறைகள், மாரடைப்பு. புற்றுநோய் ஆகியன பற்றி வெளியிட்டுள்ளது. மேலும் கொழும்பு,  பால்வினை நோய் (எய்ட்ஸ்) முதலான அனைத்து வகையான நோய்கள் பற்றியும் ஒவ்வொரு மாதமும் வெளியிட்டு மக்களின் மருத்துவ சேவையில் சிறந்த பங்களிப்பை வழங்கிகொண்டிருகின்றதென்பது இதன் மூலம் அறியலாகின்றது.


சான்றெண் விளக்கம்

1. இணையம் - மருத்துவம், தமிழ் விக்கிப்பீடிய, ப–1
.
2. தே.ப.சின்னசாமி - தமிழ்நாட்டு மருத்துவம், ப
-96.
3. முத்துச்செல்வக்குமார் - மருத்துவத் துறையில் புதிய முன்னேற்றங்கள்,

   -42.
4. தே.ப.சின்னசாமி - மேலது, ப
-19.

திங்கள், 4 செப்டம்பர், 2017

திருக்குறள் சுட்டும் இயற்கை வேளாண்மை

திருக்குறள் சுட்டும் இயற்கை வேளாண்மை

சு.பிரபாகரன்

(இக்கட்டுரை 2016, சனவரியில் அழகப்பா பல்கலைக்கழத்தில் நடைபெற்ற திருக்குறள் பன்னாட்டுக் கருத்தரங்க ஆய்வுக்கோவையில் வெளியிடப்பட்டுள்ளது.)

உலகில் உள்ள உயிரினங்களில் மிகவும் இன்றியமையாதது மனிதப் படைப்பாகும். இம்மனிதன் உயிர்வாழ்வதற்கு அடிப்படைத் தேவையாக அமைவது உணவு, உடை, உறைவிடம் ஆகும். இவற்றில் உணவே முதன்மையானது. இவ்வுணவுதான் மனிதனுக்குத் தேவையான அனைத்து வகையான ஊட்டச்சத்துக்களையும், ஆற்றல்களையும் வழங்கி நோயின்றி வாழ வழிவகுக்கின்றது. இந்த உணவை உற்பத்தி செய்வதில் இன்றியமையாததாகத் திகழ்வது வேளாண்மைத் தொழிலாகும். இவ்வேளாண்மைத் தொழிலின் தோற்றம், இன்றியமையாமை, திருக்குறளில் இடம்பெற்றுள்ள இயற்கை வேளாண்மைச் செய்திகள் பற்றிக் காண்பது இக்கட்டுரையின் நோக்கமாகும்.

வேளாண்மைத் தோற்றம்

நாம் எந்த ஒரு துறையின் தோற்றத்தைப் பற்றித் தெளிவுற அறிய வேண்டின் அத்துறையின் வரலாற்றுப் பின்புலம் இன்றியமையாததாகின்றது. இதனடிப்படையில் வேளாண்மையின் தோற்றத்தைப் பழைய கற்காலம், புதிய கற்காலம் என்னும் வரலாற்றுப் பின்புலத்தில் பின்வருமாறு காண்போம்.

மனிதன் ஆரம்பக் காலக்கட்டத்தில் இயற்கையில் கிடைத்த காய்கள், கனிகள், கிழங்குகள், மிருகங்கள் போன்றவற்றை உணவாக உண்டு நாடோடியாக வாழ்ந்து வந்தான். இதன்பின் சிக்கிமுக்கிக் கற்களை உரசி நெருப்பைக் கண்டுபிடித்து காய்கள், கிழங்குகள் மற்றும் வேட்டையாடும் விலங்குகள் போன்றவற்றைச் சமைத்துண்டான். பின் ஆண், பெண் வேறுபாட்டை அறிந்து இலைகள், மரப்பட்டைகள், விலங்குகளின் தோல் போன்றவற்றால் தனது உடலைப் பாதுகாத்துக் கொண்டான். இவ்வாறு வாழ்ந்தக் காலமே வரலாற்றில் பழைய கற்காலம் அல்லது பேலியோலிதிக் காலம் (Palaeolithic Age)ஆகும். இலைகள், மரப்பட்டைகள், விலங்குகளின் தோல் போன்றவற்றால் தனது உடலைப் பாதுகாத்துக் கொண்ட மனிதன் நிலையான வாழ்க்கையை மேற்கொண்டான். நிலையான வாழ்க்கையை மேற்கொண்டதன் விளைவாகத் தனக்குத் தேவையான உணவுகளைத் தானே உற்பத்தி செய்துகொண்டான். இவ்வாறு உற்பத்தி செய்ததின் தொடக்கமே வேளாண்மையின் தோற்றம் ஆகும். மனிதன் நிலையான வாழ்க்கையை மேற்கொண்டு உணவுப் பொருட்களை உற்பத்தி செய்த காலமே வரலாற்றில் புதிய கற்காலம் அல்லது நியோலிதிக் காலம் (Neolithic Age) ஆகும். இவற்றைப் பழைய கற்காலத்தில் மனிதன் உணவைத்தேடி நாடோடியாக அலைந்தான். பழங்கள், காய்கள், கிழங்குகள் மற்றும் கொட்டைகளைச் சேகரித்து உண்டான். பின் மிருகங்களை வேட்டையாடினான். சுpக்கி முக்கிக் கற்களை உரசி நெருப்பைக் கண்டு பிடித்தான். இலைகளாலும், மரப்பட்டைகளாலும், மிருகங்களின் தோலினாலும் தன் உடலைப் பாதுகாத்துக் கொண்டான். புதிய கற்காலத்தில் மனிதன் வேளாண்மையில் ஈடுபட ஆரம்பித்தான்1 என்பதின் மூலம் தெளியலாம்.

இந்தப் பழைய, புதிய கற்காலத்தை வரலாற்று ஆசிரியர்கள் வரலாற்றுக்கு முந்திய காலம் என்பர். வரலாற்றுக்கு முந்திய காலம் என்பது கி.மு.4000 முதல் கி.மு.3500 வரையிலான காலம் ஆகும். ஆகவே, வேளாண்மை தோற்றம் பெற்றது வரலாற்றுக்கும் முந்திய காலம் அல்லது கற்காலம் என்பதனை நாம் ஐயமுறத் தெளியலாம்.

வேளாண்மையின் இன்றியமையாமை

வரலாற்றுக்கும் முந்திய காலத்தில் தோற்றம் பெற்ற வேளாண்மையே ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு இன்றியமையாதக் காரணமாகும். நாம் ஒரு நாட்டின் இயற்கை வளங்களைச் சரியாகவும், சிறப்பாகவும் பயன்படுத்துவதன் மூலமே தனிமனித வருமானத்தையும், நாட்டின் பொருளாதாரத்தையும் உயர்ந்த நிலைக்குக் கொண்டு செல்ல முடியும். இவ்வியற்கை வளங்களை நாம் அதிகம் பயன்படுத்தி செய்யும் தொழிலே வேளாண்மைத் தொழிலாகும். இவ்வேளாண்மைத் தொழிலே நாட்டின் இன்றியமையாதத் தொழிலாகக் கருதப்படுகிறது. ஏனெனில், சுழன்று கொண்டிருக்கும் இவ்வறிவியல் யுகத்தில் எத்தனையோ தொழில்களும் துறைகளும் உருப்பெற்றாலும் அனைத்து மக்களுக்கும் பசியின்றி உணவளிப்பது வேளாண்மைத் துறையேயாகும். இதனையே வள்ளுவர்,
                
                “சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
              உழந்தும் உழவே தலை”   (குறள்.1031)
என்கிறார்.

இவ்வேளாண்மை செய்யும் உழவர்களே புறத்தொழில் செய்து பசியாறும் அனைவருக்கும் முதன்மையானவர், அச்சாணிப் போன்றவர். இவற்றை வள்ளுவர்,

உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃது ஆற்றாது
            எழுவாரை எல்லாம் பொறுத்து”   (குறள்.1032)

என்னும் குறள் மூலம் கூறுகிறார்.

இந்திய நாட்டின் மொத்த மக்கள் தொகை 130 கோடியாகிவிட்ட இந்த நிலையிலும் 60 விழுக்காடு மக்களுக்கு வேலை வழங்கும் துறை வேளாண்மைத் துறையாகும். நாட்டில் நிலவும் பசி, பட்டினி, பஞ்சம், வறுமை போன்றவற்றை வேளாண்மை மூலமே போக்க முடியும். 1990-இல் ரஷ்யாவில் கடும் உணவுப் பஞ்சமும், சட்ட ஒழுங்கு சீர்குலைவும் நேரிட்டன. இதற்கு முக்கியக் காரணம் அங்கு நிழவிய விவசாய வீழ்ச்சியேயாகும்.2 ஆகவே ஒரு நாட்டில் பஞ்சம், பசி, பட்டினி, வறுமை போன்றவை ஒழிந்து, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு வேளாண்மையே இன்றியமையாததாய் காணப்படுகின்றது.

திருக்குறளில் இயற்கை வேளாண்மை

நாட்டின் வளர்ச்சியில் இன்றியமையாமையாகக் கருதப்படும் வேளாண்மையை இரண்டாகப் பகுக்கலாம். அவை, 1.இயற்கை வேளாண்மை, 2.வேதி வேளாண்மை ஆகியனவாகும். இவற்றில் இயற்கை வேளாண்மை என்பது இயற்கையில் கிடைக்கக்கூடியவற்றை வைத்து மண்வளம், மனிதவளம் மற்றும் சுற்றுச்சூழல் போன்றவைகளுக்கு எவ்வித பாதிப்பும் இன்றி இயற்கை உரங்களைப் பயன்படுத்தி வேளாண்மை செய்தலாகும். வேதி வேளாண்மை என்பது அதிக விளைச்சலுக்காக மண்வளம், மனிதவளம் மற்றும் சுற்றுச்சூழல் போன்றவற்றைக் கருத்தில் கொள்ளாது இவற்றிற்கு ஊறுவிளைவிக்கும் வேதி உரங்களைப் பயன்படுத்தி வேளாண்மை செய்தலாகும்.

வேளாண்மையில் பயன்படுத்தப்படும் இயற்கை உரமே வேளாண்மை உற்பத்திக்கு அடிப்படையானது. உயிரிய உரங்கள், பசுந்தாள் உரங்கள், இயற்கைக் கழிவுகள், மக்கியக் குப்பைகள், மக்கிப்போன இலைதழைகள், கதிர் அறுக்கப்பட்ட தானியங்களின் எச்சங்கள், பிராணிகள், பறவைகளின் எலும்புகள், வைக்கோல், கொளிஞ்சிச்செடி, எருக்கு முதலானவைகள் இயற்கை உரங்களாகும். இவைகளே மண்வளம், மனிதவளம் மற்றும் சுற்றுச்சூழல் போன்றவைகளுக்கு ஊறு விளைவிக்காத உரங்களாகும். இவ்வியற்கை வேளாண்மைப் பற்றி திருவள்ளுவர்,
                
           “தெடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்துஎருவும்
          வேண்டாது சாலப் படும்”   (குறள்.1037)

என்று கூறுகிறார்.

உழவனானவன், “ஒரு பலம் புழுதி கால் பலம் ஆகும்படி தன் நிலத்தை உழுது காயவிட்டால் அதில் ஒருபிடி எருவும் இட வேண்டாமல் அந்நிலத்தில் பயிர் செழித்து விளையும்3 என்பதாம். இதில் எருஎன்பது பயிர்களுக்கு ஊட்டச்சத்து அளிக்கும் சாணம், மக்கியத் தாவரக்கழிவு போன்ற இயற்கை உரம்4 ஆகும். மேற்கண்ட உயிரிய உரங்கள் முதல் எருக்கு வரையிலான இயற்கை உரங்களைத் திருவள்ளுவர் 2046 ஆண்டுகளுக்கு முன்னமே எருஎன்ற சொல்லின் மூலம் சுட்டிச் சென்றமை அவரின் ஆழ்ந்தப் புலமையை விளக்குகிறது. ஆகவே, ஒரு உழவன் தன் நிலத்தில் (இயற்கை) உரம் இடாமலேயே நன்கு உழுது பக்குவப்படுத்தினால் அந்நிலத்தில் நல்ல விளைச்சல் உண்டாகும் என்பது தெளிவாகின்றது.
மேலும்,

ஏரினும் நன்றால் எருஇடுதல் கட்டபின்
          நீரினும் நன்றுஅதன் காப்பு”   (குறள்.1038)

என்ற குறளில், வேளாண்மை செய்யும் முறையினையும் சுட்டுகிறார். உழவன் தன் நிலத்தை நன்கு ஏர் விட்டு உழுது, பின் எரு இடுதல் வேண்டும். இந்த இரண்டும் செய்தபின் களை நீக்கல் வேண்டும். களை நீக்கியப் பிறகு நீர்;ப்பாய்ச்சுதலைவிட அதனைக் காவல் காக்க வேண்டும் என்று இயற்கை வேளாண்மை செய்யும் முறையைத் திருவள்ளுவர் விளக்குகிறார். இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரை நம் சொந்த நிலங்களில் நாம் இவ்வியற்கை முறையிலேயே வேளாண்மை செய்தமை குறிப்பிடத்தக்கது.

முடிவுரை

ஒரு நாட்டின் முதுகெலும்புஎனக் கருதப்படும் வேளாண்மை, வரலாற்றுக்கும் முந்திய காலத்தில் தோற்றம் பெற்று, நாட்டின் வளர்ச்சியில் இன்றியமையாத பங்கினை வகிக்கின்றது. இவ்வியற்கை வேளாண்மை மக்கள், அஃறிணைகள் மற்றும் சுற்றுச் சூழலிற்குச் சிறந்ததென்பதையும், இவ்வேளாண்மை திருக்குறளில் மேற்கண்டவாறு இடம்பெற்றுள்ளமையையும் இக்கட்டுரை விளக்கி நிற்கின்றது.

சான்றெண் விளக்கம்

1.   பாடநூல்       -  9-ஆம் வகுப்பு சமூக அறிவியல் (2005), ப.3.
2.   இணையம்      -  விக்கிப்பீடியா, வேளாண்மை, ப.4.
3.   மு.வரதராசனார்   -  திருக்குறள் தெளிவுரை, ப.210.
4.   …..          -  கிரியாவின் தற்காலத் தமிழ் அகராதி, ப.254.