செவ்வாய், 11 மார்ச், 2014

தொல்காப்பியமும் தாவரவியலும்

தொல்காப்பியமும் தாவரவியலும்
                                                                                                                                                                                                                                                                                    சு.பிரபாகரன்

                  (இக்கட்டுரை இ.ப.த.மன்ற ஆய்வுக்கோவையில் வெயிடப்பட்டுள்ளது.)

    இன்று நாம் அறிவியல் உலகில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். அனைத்தையும் அறிவியலின்கண் கொண்டு; காரண காரியத்தோடு ஆராய்ந்தறியும் நிலைமை இன்று நிலவுகிறது. இன்று அறிவியல் புகாதத் துறையே இல்லை என்று சொன்னால் அது மிகையாகாது. இந்த அதிவேக அறிவியல் வளர்ச்சிக்குக் காரணமாய் அமைவது மிகவும்; தொன்மை வாய்ந்த மொழியும், மொழிக் கூறுகளுமாகும். மொழிக்கூறுகள் என்பது மொழியின் வாயிலாக உருவான இலக்கிய, இலக்கணக் கோட்பாடுகளே அறிவியல் போன்ற பல்துறை தோன்றக் காரணமான வித்தாகும். இவ்வகையில் உலகின் மிகத்தொன்மையான மொழிகளில் ஒன்றாகக் கருதப்பெறும் தமிழ் மொழியின் முதல் நூலும், முதல் இலக்கண நூலுமான தொல்காப்பியத்தில் தாவரவியல் செய்திகள் புதைந்திருப்பதை வெளிக்கொணர்வது இக்கட்டுரையின் நோக்கமாகும். 

தொல்காப்பியம்

     உலகில் காணப்படும் செம்மொழிகளுள் சிறப்புப் பெற்றுச் செம்மொழிக்குரிய அனைத்துத் தன்மைகளையும் கொண்டு விளங்கும் மொழி நம் தமிழ் மொழியாகும். இத்தமிழ் மொழியில் கிடைக்கப்பெற்ற முதல் நூலும் உலகமொழி இலக்கணங்களுக்கெல்லாம் பொருள் இலக்கணத்தை நல்கும் மூத்த நூலாகவும் விளங்குவது தொல்காப்பியம் ஆகும். இத்தொல்காப்பியம் எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் ஆகிய மூன்று அதிகாரத்தில் சிறப்புமிகு செய்திகளைக் கூறுகின்றது. எழுத்ததிகாரம் நூன்மரபு முதலாக குற்றியலுகரப் புணரியல் ஈறாக 9 இயல்களையும் 483 நூற்பாக்களையும்; சொல்லதிகாரம் கிளவியாக்கம் முhலாக எச்சவியல் ஈறாக 9 இயல்களையும் 456 (சேனாவரையர் 463) நூற்பாக்களையும்; பொருளதிகாரம் அகத்திணையியல் முதலாக மரபியல் ஈறாக 656 நூற்பாக்களையும் இவ்வெண்ணிக்கைப்படி மொத்தம் 1595 நூற்பாக்களைத் தொல்காப்பியம் கொண்டுள்ளது. ஆனால் பலர் 1610 நூற்பாக்கள் என்றும் ஒரு சிலரே 1611 நூற்பாக்கள் என்றும் கொண்டுள்ளனர். இத்தொல்காப்பியம் இன்று அனைவராலும் விரும்பி கற்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

தாவரவியல்
     “தாவரங்களைப் பற்றிக் கூறும் துறையான தாவரவியல் - Botony என்னும் அறிவியல் பெயர் கொண்டது. இப்பெயர் பொட்டேன் (Botane)என்னும் கிரேக்கச் சொல்லிலிருந்து செடிஎன்னும் பொருளில் பெறப்பட்டதாகும். உயிரியியலின் ஒரு பிரிவான தாவரவியல், தாவரங்களின் வாழ்க்கை பற்றியும், அவற்றின் தன்மைப் பற்றியும், அவற்றின் பயன் பற்றியும் கூறும் அறிவியலாக விளங்குகிறது.1 மேலும், தமிழில் மரம், செடி, கொடி, புல் முதலானவற்றை ஒருங்கே தொகுத்துச் சுட்ட இன்று வழங்கும் பெயர் தாவரம்என்பதாகும். தாவரம் என்பது ஸ்தாபரஎன்ற வடசொல்லின் திரிந்த வடிவமாகக் கருதப்படுகிறது.2 தாவரவியல் என்பது தாவரங்களின் கட்டமைப்பு, செயல்முறை, வளர்ச்சி, இயக்கம், இனப்பெருக்கம், சூழலுக்கேற்ப தகவமைத்துக் கொள்ளும் தன்மை, பரவப் பெருகும் முறை, வாழ்வுக் காலம், தொடர்புகள், பிரிவுகள் தோன்றிய விதம், உருமலர்ச்சிப் பண்புகள், பயன்கள் ஆகியவற்றை விவரித்துக் கூறும் அறிவியல் துறையாகும்.

தாவரவியலின் பாகுபாடு
     தாவரவியலை இரண்டாகப் பாகுப்படுத்துவர் தற்கால அறிவியலாளர். அவை, 1.பூக்கும் தாவரம், 2. பூவாத் தாவரம் ஆகியனவாகும். பூக்கும் தாவரங்களை ஒருவித்திலைத் தாவரம், இருவித்திலைத் தாவரம் என இரண்டாகப் பகுப்பா.;

பூக்கும் தாவரம்
     பூக்கும் தாவரங்கள் பூப்பூத்து, காய்காய்த்து, பின் கனியாகும் தாவரங்கள்; ஆகும். நாம் தோட்டங்களிலும் சாலை ஓரங்களிலும் காணும் தாவரங்கள் பூக்கும் தாவரங்கள் அல்லது ஆஞ்சியோஸ்பெர்ம்கள் எனப்படும். இதில் ஆஞ்சியோ என்றால் பெட்டியயும், ஸ்பெர்ம் என்றால் விதையையும் குறிக்கும். இதில்சூல்கள் பெட்டி போன்ற சூல்பைக்குள் மூடப்பட்டுள்ளன. இதனால்தான் இவை இப்பெயர் பெற்றன. உயிரியல் வகைப்பாட்டின்படி பூக்கும் தாவரங்களை ஒருவித்திலைத் தாவரம், இருவித்திலைத் தாவரம் என்று இருவகையாகப் பிரிப்பர்.3

ஒருவித்திலைத் தாவரம்
     ஒருவித்திலைத் தாவரம் அல்லது ஒருவித்திலையி என்பது பூக்கும் தாவர வகையைச் சேர்ந்த இரு பெரும் பிரிவுகளுள்; ஒன்றாகும். இத்தொகுதியில் உள்ள பெரும்பாலான தாவரங்கள் தமது வித்துக்களில் ஒரு வித்திலைகளைக் கொண்டிருப்பதனால் ஒருவித்திலைத் தாவரம் என்று பெயர் பெற்றது. இதில் பூக்கும் பூ மூவடுக்குத் தன்மையுடனும், மகரந்தத் தூள்கள் ஒரு துளையையுடையதாகவும் காணப்படுகின்றன. இதன் வளர்கரு ஒரு வித்திலைகளைக் கொண்டிருப்பது சிந்திக்கத்தக்கது. இவற்றிற்கு எடுத்துக்காட்டாக தானியங்கள்(நெல், சோளம், கோதுமை போன்றவை), மேய்ச்சற்புற்கள், மூங்கில் போன்றவற்றைக் கூறலாம். தென்னை, வாழை, வெங்காயம் போன்றவை பொருளியற் சிறப்புக் கொண்ட பிற தாவரங்களாகும். பூக்களுக்காகப் பயிரிடப்படும் லில்லிகள், ஐரிசுகள், ஆர்க்கிட்டுகள், மணி வாழைகள், துலீப்புகள் போன்ற தாவரங்களும் ஒருவித்திலைத் தாவரங்களாகும்.

இருவித்திலைத் தாவரம்
     இருவித்திலைத் தாவரம் அல்லது இருவித்திலையி என்பது வித்துக்களில் இரு வித்திலைகளைக் கொண்டு பூக்கும் தாவரமாகும். இருவித்திலைத் தாவரங்களில் பூக்கள் நான்கடுக்கு அல்லது ஐந்தடுக்குத் தன்மை கொண்டதாகவும், மகரந்தத்தூள் மூன்று துளைகளைக் கொண்டதாகவும் காணப்படுகின்றன. இவற்றின் தண்டுகள் வட்டவடிவில் அடுக்காவும், வேர்கள் மூளை வேரில் இருந்தும், இலைகள் வலைப் பின்னல் அமைப்பிலும் காணப்படும். இவ்வகைத் தாவரங்களுக்கு உதாரணமாகப் பட்டாணி, கொண்டைக்கடலை, அவரை மற்றும் ஆமணக்குப் போன்றவற்றைக் கூறலாம். இதன் வளர்கரு இருவித்திலையைக் கொண்டிருப்பதை நாம் அவற்றை நன்கு உற்றுநோக்குவதன் மூலம் அறியலாம். இவ்வாறாக ஒருவித்திலை, இருவித்திலைத் தாவரங்களை அறிவியலார் விளக்குவர்.

பூவாத் தாவரம்
     பூவாத் தாவரம் அல்லது ஜிம்னோஸ்பெர்ம் என்பவை, பூக்கும் தாவரம் போல் பூப்பூத்து, காய்காய்த்து, கனியாகும் தன்மை இல்லாத தாவர இனமாகும். இவற்றை விதைத் தாவரம் என்றும் கூறுவர். இவற்றின் விதைத் திறந்த நிலையிலேயே காணப்படும். அதாவது ஜிம்னோஸ் என்ற சொல்லுக்குத் திறந்த என்ற பொருளும்; ஸ்பெர்மோஸ் என்ற சொல்லுக்கு விதைகள் என்ற பொருளும் உண்டு. ஏனெனில் ஜிம்னோஸ்பெர்ம்களில் சூல்கள் திறந்த நிலையில் உள்ளன. அவை சூல்பையினால் மூடப்பட்டிருப்பதில்லை. அதற்குப் பதிலாக திறந்த மெகாஸ்போராக இலைகள் என்றழைக்கப்படும் சூலிலைகள் மீது சூல்கள் நேரிடையாக இணைக்கப்பட்டுள்ளன. இதனாலேயே இவை திறந்தவை என்றும் கருவுறுதலுக்குப் பின்னர் இவை மூடப்படாத திறந்த விதைகளை உண்டாக்குகின்றன என்றும் அறியப்படுகின்றன.

     ஜிம்னோஸ்பெர்ம்கள் எனப்படும் விதைத் தாவரங்கள் பல்லாண்டு வாழக்கூடிய மரங்களாகும். இவ்விதைத் தாவரங்களில் புதர்ச்செடிகள் காணப்படுவது வெகு அரிதாகும். இதில் மகரந்தச் சேர்க்கை காற்றின் மூலமே நிகழ்கிறது. இவ்வகைத் தாவரங்கள் கட்டுமானப் பணிக்கான பைனஸ் தொழிற்சாலைக்குப் பயன்படும் பிளைவுட் போன்றவைகளை உற்பத்தி செய்யப்பயன்படுகின்றன. பைனஸ் தாவரத்தின் ரெசினிலிருந்து டர்பன்டைன் பெறப்படுகிறது. இது மருத்துவத்தில் வலி, மூச்சுக்கோளாறு போன்ற நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுகிறது. மேலும், பல்வேறு பயன்பாடுகளுடன் இப்பூவாத் தாவரம் காணப்படுகின்றது.

தொல்காப்பியத்தில் தாவரவியல்
     தாவரக் குடும்பங்களைத் தாவரவியல் வல்லுநர்கள் மேற்கண்டவாறு அவற்றின் அமைப்பு, பண்பு முதலியவற்றைக் கொண்டு பிரிக்கின்றனர். இவற்றைத் தொல்காப்பியர் ஓரறிவு உயிர் வகையில் கீழ்க்கண்டவாறு கூறுகிறார்.

                                      “புல்லும் மரனும் ஓரறி வினவே
                             பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே.”          தொல். 1511

என்னும் நூறபாவில் தொல்காப்பியர் தாவரவியலின் அனைத்துப் பிரிவுகளையும் கூறுகிறார். இதில் புல்லும் மரனும் ஓரறி வினவேஎன்றதனால் புல்என்பது புறவயிர்ப்பு உடையன என்றும் மரம்எனபது அகவயிர்ப்புடையன என்றும் இளம்பூரணார் கூறுகிறார். பேராசிரியர், புறக்காழனவாகியப் புல்லும்அகக்காழனவாகிய மரனும’; ஓரறிவுடைய உயிர் என்று கூறுகிறார். இளம்பூரணார், பேராசிரியர் ஆகிய இருவரும் புல், மரம் என்பனவற்றில் ஒருமித்தக் கருத்தைக் கொண்டுள்ளனர். இவற்றில் வெளிபுறத்தில் வயிரமுடையது புல்ஆகும்.

புல்
     புல் என்பது ஒருவித்திலைத் தாவரமாக இருப்பதுடன், நிலத்திலிருந்து தொடங்கும் ஒடுங்கிய இலைகளைக் கொண்ட செடி வகைத் தாவரமுமாகும். மனித வாழ்வுக்குத் தேவையான அடிப்படை உண்டி, உடை, உறையுள் ஆகியனவாகும். இதில் மனிதனுக்குத் தேவையான அனைத்து ஆற்றல்களையும் அளிப்பது உண்டி எனப்படும் உணவே ஆகும். இவ்வுணவுகள் புல் வகைத் தாவரங்களில் அதிகம் உற்பத்தியாகின்றன. இப்புல் வகைத் தாவரத்தின் உறுப்புகளாகத் தொல்காப்பியர்,

                                தோடே மடலே ஓலை என்றா
                       ஏடே இதழே பாளை எனறா
                       ஈர்க்கே குலையே நேர்ந்தன பிறவும்
                       புல்லொடு வருமெனச் சொல்லினர் புலவர்.”                         தொல். 1571

என்பர். இந்நூற்பாவில் புல்லிற்குரிய உறுப்புகளாகத் தோடு, மடல், ஓலை, ஏடு, இதழ், பாளை, ஈர்க்கு, குலை போன்றவற்றைக் கூறுகிறார். தெங்கு, பனை, பாக்கு போன்றவை மரமென்று கூறப்பட்டாலும் உறுப்புகளின் அடிப்படையில் இவை புல்வகைத் தாவரங்களாகும்.

மரம்
     மரம் என்பது உள் வயி;ப்புடைய இருவித்திலைத் தாவரமாகும். பூக்கும் தாவரங்கள் பெரும்பாலானவை இவ்வகுப்பைச் சேர்ந்தவையாகும். இவற்றின் இலைகள் அகன்றும், நரம்புகள் பின்னலுடனும் காணப்படும். ஆணிவேர் கற்றையாக இருக்கும். மரங்களின் உள்ளீடு திண்மை வாய்ந்ததாகக் காணப்படும். இதற்குப் புளி, இலுப்பை, தேக்கு, ஓமை, புன்னை, வேம்பு, மா, வாகை, பலா போன்றவைச் சான்றுகளாகும். இம்மரத்தின் உறுப்புகளாகத் தொல்காப்பியர்,

                        இலையே முறியே தளிரே தோடே
             சினையே குழையே பூவே அரும்பே
             நனையே உள்ளுறத் தனையவை யெல்லாம்
             மரனொடு வரூஉங் கிளவி என்ப.”                   தொல். 1572 

எனபர். இதில் இலை, முறி, தளிர், தோடு, சினை, குழை, பூ, அரும்பு, நனை போன்றவற்றை மரத்திற்குரிய உறுப்புகளாகக் கூறுகிறார். மேலும், உள் வயிரமும் வெளிவயிரமும் இல்லாத முருங்கை, தனக்கு(நுரை) போன்றவையும் மரமென்று அழைக்கப்படும் என்கிறார். பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பேஎனறதனால், இளம்பூரணார் - கொட்டியுந் தாமரையும் இவை புறத்தே வயிரமுடைய புல்என்ற பகுப்பிலும் அகத்தே வயிரமுடைய மரம்என்ற பகுப்பிலும் அடங்காமையால் பிறஎனப்பட்டன4 என்கிறார். பேராசிரியர், “கிளைப்பிறப்பு என்பதனைக் கிளையும் பிறப்பும் என விரித்து உம்மைத் தொகையாகக் கொண்டார். கிளை என்பன புல் போன்று புறவயிரமும் மரம் போன்று உள்வயிரமும் இனறிப் புதலும், கொடியும் போன்றுள்ள தாவரங்கள்5 என்கிறார். தொல்காப்பியர் மரம், செடி, கொடி, போன்ற அனைத்துத் தாவரங்களையும் ஓரறிவினுள் அடக்குவது இங்குப் புலப்படுகிறது.

முடிவுரை
இன்றைய மேலைநாட்டு அறிவியல் வளர்ச்சியால் தாவரவியல் பல தனித்துறைகளாக வளர்ந்துள்ளது. அவை, “தாவரப் புற அமைப்பியல், தாவர உள் அமைப்பியல், தாவர வாழ்வியல், வகைப்பாட்டியல், செல் உயிரியல், மரபியல் சூழ்நிலையியல் எனப் பல முனைகளில் பரந்து விரிந்துள்ளன.6 இவற்றைத் தொல்காப்பியர், புல், மரம் விளக்கம் தருகையில் புறக்காழ்’ ‘அகக்காழ்என்பதிலும்; இதன் உறுப்புகள் பற்றியப் பகுப்பிலும் சுட்டியுள்ளார். தொல்காப்பியரின் இப்பகுப்பே இன்றைய அறிவியலார்களின் தாவரவியல் ஆய்வுத் துறைகள் வளர்வதற்குக் காரணமாய் அமைந்த வித்து என்பதனை நாம் அறியலாம்.

சான்றெண் விளக்கம்
1. நே.ஜோசப்(ப.ஆ), அறிவியல் களஞ்சியம்-தொ-11, ப.719.
2. பா.சந்திரசேகரன், தமிழ் இலக்கணங்களில் அறிவியல் சிந்தனைகள், ப.46.
3. இணையம்: http://tawp.in/r/sgh,பூக்கும் தாவரம், ப.1.
4. க.வெள்ளைவாரணன், தொலகாப்பியப் பொருளதிகார மரபியல் உரைவளம்,
  ப.44.
5. மேலது, ப.44.
6. வே.நெடுஞ்செழியன், தமிழர் கண்ட தாவரவியல், ப.12.